Monday 30 April 2012

திருநங்கையர் மனக்குமுறலை ‘எதிரொலிக்கும் கரவொலிகள்’


நாடகக்களம்


டுக்கப்பட்ட மக்கள் தங்களது விடுதலைக் குரலைக் கலையாக வெளிப்படுத்தும்போது அது ரசனைக்குரியதாக மட்டும் இருப்பதில்லை, போராட்ட உணர்வைத் தூண்டுகிற படைப்பாக்கமாகவும் அமைகிறது. திருநங்கை நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்து மேடையேற்றியுள்ள ‘எதிரொலிக்கும் கரவொலிகள்’ என்ற நாடகம் இதற்கு சாட்சியம் கூறுகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் திருநங்கையர் பிரச்சனைகள் பல வடிவங்களில் முன்னுக்கு வந்துள்ளன. பொது இடங்களில் கைகளைத் தட்டிக்கொண்டு, ‘ஒரு மாதிரியாக’ நடந்து கொண்டு பிச்சை கேட்கிறவர்கள், உழைப்ப தற்கு மனமில்லாமல் உடலை விற்கிறவர்கள், சமூக ஒழுங்கிற்குக் கட்டுப்படாதவர்கள் என் றெல்லாம் அதுவரையில் திருநங்கையர்கள் பற்றி பேசப்பட்டு வந்தது. திரைப்படங்களிலும், தெருக்களிலும் ‘ஒன்பது’ என்ற எண் இவர் களைப்பற்றிய இளக்காரமான அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. “நாங்களும் மனிதர் கள்தான்... எங்களுக்கும் உங்களைப்போல உணர்வுகள் உண்டு, சுயமரியாதை உண்டு,” என்ற குரல் அவர்களிடமிருந்து ஒலிக்கத் தொடங்கி இந்த 20 ஆண்டு காலத்தில் படிப்படி யாக உரத்து முழங்கி வருகிறது.

அரசு இவர்களுக் கான நலவாரியம் அமைத்திருப்பது, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இவர்கள் தங்களை திருநங்கையர் என்றே குறிப்பிடுவதற்கான உரிமை, கல்விக் கூடங்களிலும்- பணித்தலங் களிலும் இவர்களுக்கு இடம் அளித்தாக வேண் டும் என்ற வலியுறுத்தல்... என்ற காட்சி மாற்றங் கள் எளிதில் நிகழ்ந்து விடவில்லை. திருநங் கையர் அமைப்புகளின் இடையறாத முயற்சி கள், இவர்களைப் புரிந்து கொண்டவர்களின் தோழமைக் கரங்கள், போராட்டக் களங்கள், அதில் ஏற்பட்ட காயங்கள் என ஆழமான பின்னணிகள் இருக்கின்றன. எதிர்காலத்தில் திருநங்கையர் சமமாக மதிக்கப்படுவதற்கான இன்றைய ஒரு போராட்டப் படைப்பாக வந்திருப்பதுதான் வானவில் கலைக்குழு வழங்கியுள்ள இந்த நாடகம்.

உள்ளடக்கம், உருவம் இரண்டிலுமே பார் வையாளர்கள் மனம் நிறையும் வண்ணம் இந்த நாடகம் உருவாகியிருக்கிறது. நாடகம் தொடங்கு வதாக அறிவிக்கப்பட்ட உடனேயே தோல் கருவியின் தாளம் ஒவ்வொரு அடியாக ஒலிக் கத் தொடங்கி வேகம் பிடிக்கிறது. அப்போது பார்வையாளர்களிடையே இருந்து கலைஞர் கள் - அனைவரும் திருநங்கையர் - வரிசையாக மேடையில் ஏறி இரண்டு நீள கயிறுகளைக் கட்டுகிறார்கள். அந்தக் கயிறுகளில் துணிகளைத் தொங்கவிடுகிறார்கள், மேடை யைக் குறுக்கும் நெடுக்குமாகச் சுற்றி வந்து பின்புலத் திரையை நோக்கி அமர்கிறார்கள். இப்படி மேடை ஏற்பாட்டை நாடகத்தின் தொடக்க அங்கமாகவே ஆக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேடைத் திரையில் ஓசை எதுவுமின்றி சில திரைப்படக் காட்சிகள் ஓடுகின்றன. பாடல் காட்சிகளில் திருநங்கையர்கள் எப்படியெல்லாம் கேலிப் பொரு ளாகக் காட்டப்பட்டார்கள் என்ப தைக் காட்டுகிற காட்சிகள் அவை. ஒருவர் எழுந்து “இதே காட்சிகளை இன்னும் எத்தனை நாள் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்,” என்று கேட்கிறார். “ஏன் பார்த்தால் என்ன,” என்ற பதில் கேள்வி எழுகிறது... அப் படியே நாடகம் வாழ்க்கையின் உண்மை நிலைகள் பற்றிய விமர்சனமாக விரிகிறது.

“அரவாணிகள் கைது,” “ஆண் விபச்சாரிகள்,” “சிறுவனைக் கடத்திய அலிகள்...” இப்படியெல் லாம் ஊடகங்களில் வரும் செய்திகள் நீண்டதொரு துணியில் எழுத்துகளாக எழுதப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட செய்திகளின் பின்னால் மறைக் கப்படும் திருநங்கையரின் உண்மை வாழ்க்கை நிலைமைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அதே துணி கலைஞர்களைச் சுற்றி ஒரு விலங்குபோல பிணைத்துக் கொள்கிறது. திருநங்கையர்களைக் கிண்டல் செய்த பிரபலமான திரைப்படப் பாடல் கள் ஒலிக்க சில கலைஞர்கள் ஆடுகிறார்கள். ஊடகங்களின் திரிக்கப்பட்ட செய்திகள் இவர் களை முன்னேற விடாமல் கட்டிப்போடுவதை உணர்த்துவதாக இந்தக் காட்சி அமைகிறது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரி இவர்களிடம் வருகிறார். பெயர்களைக் கேட்கிறார். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொண்ட பெண் பெயர்களைச் சொல்ல அவரோ இவர்களை ஆண்களின் வரிசையில் பதிவு செய்கிறார். சட்டத்தில் இவர்களை திருநங்கையர் என்றே குறிப்பிடுவதற்கான ஆணை பிறப்பிக்கப் பட்டதோ, இவர்கள் விரும்பினால் பெண் வரிசையில் பதிவு செய்யலாம் என இருப்பதோ அந்த அலுவலருக்குத் தெரியவில்லை. “நீங்களெல்லாம் இந்தியர்கள்... இந்தியக் குடிமக்கள்” என்று அவர் சொல்ல திருநங்கையர்கள் வெடித்துச் சிரிக் கிறார்கள். “நாங்கள் இந்தியக் குடிமக்கள் என்பது இப்போது மட்டும்தான் உங்களுக்குத் தெரிகிறதா,” என்று அவர்கள் கேட்கிறார்கள். வீட்டில் துவங்கி பொதுவெளி வரையில் தங்களைச் சிறுமைப்படுத் தும் சமுதாயத்தைப் பார்த்து  “நாங்கள் உங்களோடு தான் இருக்க விரும்புகிறோம்... ஆனால் நீங்கள்தானே எங்களை ஒதுக்குகிறீர்கள்,” என்று கேட்காமல் கேட்பதாக அந்தச் சிரிப்பொலி எழுகிறது. மக்களின் மனசாட்சியை அந்தச் சிரிப்பொலி தொட்டுவிட்டது என்பது பார்வையாளர்களிட மிருந்து எழுகிற பலத்த கரவொலியில் எதிரொலிக்கிறது.

ஏப்ரல் 15 திருநங்கையர் தினத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் நடந்த விழாவில் அரங்கேற்றப்பட்ட இந்த நாடகத்தில் பங்கேற்ற அனைவருமே திருநங்கை வாழ்க்கை நிலைமையின் பல்வேறு படிகளில் நிற்பவர்கள். ஒரு வார கால ஒத்திகையில் பிசிறின்றி இந்த நாடகத்தை நடத்தியது அவர்களது ஈடுபாட்டை உணர்த்தியது. விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்பாகக்கூட இவர்களில் சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு போலியாக திருட்டுப்பழி சுமத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்கள், தமுஎகச முயற்சியால் ஜாமீனில் வெளிவந்து தொடர்ந்து நாடகத்தில் பங்கேற்றார்கள். உரிமைச் செய்திகளை வெளிப்படுத்துவதற்கு இப்படி எத்தனை தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது.

அப்படித் தாண்டுவதற்கான மன உறுதியை ஏற்படுத்தி, கலைக்குழுவாக செயல்படுவதற்கான ஒருங்கிணைப்பு பொறுப்பை ஏற்றவர் நாடகத்துறையில் தனக்கென ஒரு முத்திரை பதித்துவரும் இளம் கலைஞர் லிவிங் ஸ்மைல் வித்யா. நாட கத்தை நெறியாள்கை செய்தவர் மொளகாப் பொடி புகழ் ஸ்ரீஜித் சுந்தரம். சித்திரசேனன் தாள இசை நாடகம் முழுவதும் வந்து பேசுகிறது. வின்சென்ட் பால் ஒளியமைப்பும், தமிழரசன் காட்சியமைப்பும் நாடகத்திற்கு எழில் சேர்க்கின்றன.

கோமதி, மானு, தேன்மொழி, திவ்யா, விபாசா, பிரபா, குஷ்பூ, சிந்து, ரசிகா, தேவி ஆகியோரின் ஈடுபாடு மிக்க நடிப்பு மாற்றத்திற்கான நியாய ஆதங்கத்தைப் பிரதிபலித்தது.

மாநிலம் முழுவதும் இந்த நாடகம் கொண்டு செல்லப்பட வேண்டும். அது இந்தக் கலைஞர்களுக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, “எங்களுக்கு உங்கள் தோள் வேண்டும், தோழமை வேண்டும்” (விழாவின் எழுத்தாளர் பிரியா பாபு சொன்ன சொற்கள்) என்ற திருநங்கையரின் வேண்டு கோளை தமிழ்ச் சமுதாயம் செவிமடுக்கச் செய்வதற்கான முனைப்பாகவும் அமையும்.

(‘தீக்கதிர்’ 29.4.2012 இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வெளியாகியுள்ள எனது நாடக அறிமுகக் கட்டுரை)

No comments: