Sunday 16 December 2007

மசியல்

நலம் தரும் போக்குவரத்து மசியல்

போக்குவரத்து மசியல் - அதுதாங்க டிராபிக் ஜாம் - இப் போதெல்லாம் ரொம்பவும் சர்வ சாதாரணமாகிவிட்டது. சென்னை போன்ற நகரங்களில், சாலைகள் சந்திக்கும் இடங்களில் கண்டிப் பாக அந்த மசியலைச் சந்திக்க வேண் டியிருக்கிறது. அந்த இடங்களில் எல்லாம் புலம்பல்களும் வசவுகளும் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர, ஆறு சக்கர, பல சக்கர வாக னங்களோடு சேர்ந்து உறுமலாய் வெளியாகிக் கொண்டே இருக்கின் றன.
“ஒவ்வொரு சிக்னல்லயும் இப்படி நிக்க வேண்டியதாப் போச்சே,” என் கிறார் ஒருவர். “அந்த சிக்னல்ல தப்பிச்சு இங்கே வந்து மாட்டிக் கிட்டேன்,” என்கிறார் இன்னொருவர். இந்த வசனங்களை முன்னால் நிற் கும் ஒரு வண்டி, அதன் புட்டத்தில் முத் தமிடுவது போல் நிற்கும் அடுத்த வண்டி, அடுத்தடுத்த வண்டி என எல்லா வண்டிகளின் ஓட்டிகள், பயணிகளும் நீக்கமற உச்சரிக்கிறார்கள்.
“பாலங்கள் நிறைஞ்ச ஊர், பூங்காக்கள் நிறைஞ்ச ஊர், யுனிவர்சிட்டி நிறைஞ்ச ஊர், கோயில் நிறைஞ்ச ஊர் ... இப்படி மற்ற மாநிலங்கள்ல இருக் கிறவங்க பெருமைப்பட்டுக்கிடுறாங்க. நம்ம சென்னை என்னடான்னா சிக்னல்கள் நிறைஞ்ச ஊரா இருக்கு,” என்று அந்த இடுக்கண் நேரத்தில் நகு வதன் மூலம் ஒருவர் தன் துயரம் மறக் கப் பார்க்கிறார்.
“என்னப்பா இது, ஓடுற நேரத்தை விட நிக்கிற நேரம்தான் அதிகமா இருக்கு.” ... “என்னை என்ன சார் செய் யச் சொல்றீங்க?” ... “உன்னை ஒண் ணும் சொல்லலப்பா, இப்படி நிக்கிற நேரத்துக்கும் சேர்த்து உனக்கு நான் காசு கொடுக்கும்படியா ஆக்கிட்டாங் களே, அதை நெனைச்சுப் பார்த்தேன்.” ... “உங்ககிட்ட வாங்குற காசு இப்படி நிக்கிற நேரத்தில வே°ட்டாகிற பெட் ரோலுக்கே சரியாப் போயிடுதே, அதைத்தான் சார் நான் நெனைச்சுப் பார்க்கிறேன்.”- இது ஒரு ஆட்டோ பய ணிக்கும் அதன் ஓட்டுனருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை என விளக்க வேண்டியதில்லை.
“யாருதான் கார் வாங்குறதுன்னு ஒரு தராதரமே இல்லாமப் போச்சு. டிபார்ட்மென்ட் லோன், பேங்க் கிரெடிட், ஃபைனான்° எல்லாம் கிடைக்குதுன்னு அவனவனும் கார் வாங்குறான்.” -ஒரு காரோட்டி தன் பக்கத்தில் அமர்ந் திருப்பவரிடம் இப்படிச் சொல்கிறார். ‘இவரே லோன் மேளாவில் கார் வாங் கினவர்தானே... ஒரு ஓசி டிரிப் அடிக்கலாம்னு இவர் வண்டியில வந்தா, அடுத்த மாசம் நாமளும் லோன் போடலாம்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறப்ப இப்படிப் பேசுறாரே.’ -பக்கத்து சீட் பயணியின் மனதில் இவ்வாறாக ஓடுகிறது.
நீண்ட நேரம் காத்திருந்த கடுப்பில் ஒருவர் தனது வண்டியை சற்றே கிடைத்த இடைவெளியில் புகுத்த, “அவ னுக்கு ஏதாவது அறிவிருக்கா பாரு” என்கிறார், சில நிமிடங் களுக்கு முன் இதே போன்ற பாராட்டுக்கு இலக்கான இன்னொருவர்.
ஒருவர் கொஞ்சம் அத்துமீறி, “பொம்பளைங்க எல்லாம் பைக் ஓட்ட வந்துட்டாங்க, அப்புறம் ஏன் டிராபிக் ஜாம் ஏற்படாது,” என்று மொழிகிறார். அவருடைய பார்வையின் திசையில் தன் சினேகிதியுடன் இரு சக்கர வண்டியில் நின்று கொண் டிருக்கும் ஒரு சுடிதார் பெண் திரும்பிப் பார்த்து முறைக்க இவர் கப்பென்று வாயை மூடிக்கொள்கிறார்.
சாலைச் சந்திப்பின் குறுக்கே சென்ற வாகனங்கள் ஒரு வழியாகக் குறைய, அனுபவஸ்தர்கள் உடனே தமது வண்டிகளைக் கிளப்புவதற்குத் தயாராக சீற்ற நிலைக்குக் கொண் டுவருகின்றனர். சிவப்பு விளக்கு அணைவதற்கு முன்பே, குறுக்குச் சாலையில் கடைசி வாகனங்கள் கடந்து முடிவதற்கு முன்பே கிளம்புகின்றனர். அனுபவமற்றவர்கள், பச்சை விளக் குக்காகக் காத்திருந்து, பின்னால் இருப்பவர்களின் ஆரன் எரிச்சலுக்கு உள்ளாகிறார்கள். அது வரையிலான புலம்பல்கள் முடிந்து வண்டிகள் பாய்ந்து பறக்கின்றன. சொற்ப நேரத்தில் சிவப்பு சிக்னல் விழ, மறுபடி வண்டிகள் தேக்கம். மறுபடி புலம் பல்கள். சலிப்புகள். மறுபடி கிண்டல்கள். மறுபடி வசவுகள்.
ஆனால், சாலைச் சந்திப்புகளின் போக்குவரத்துத் தேக்கம் குறித்து கவலைப்படவோ, இப்படிப் புலம்பித் தீர்க்கவோ தேவை யில்லை என்றே தோன்றுகிறது. யோசித்துப் பார்த்தால், வண் டிகள் இப்படித் தேங்கி நிற்பதால் நன்மைகளே அதிகம்! மிகை நாடி மிக்க கொளலே சாலவும் நன்று என்பதால், கஷ்டங் களையும் நஷ்டங்களையும் விட, ஆதாயங்களே மிகுதி என்ற நிலையில் டிராபிக் ஜாம் வரவேற்கத்தக்கதே.
முதலில், நீங்கள் என்னதான் முண்டினாலும், ஊர்ந்திடும் அவ்வளவு வாகனங்களின் இடுக்குகளில் உங்களால் வேகமாக உங்கள் வண்டியைச் செலுத்த முடியாது. சாலைச் சந் திப்புகளில்தான் சிக்னல் விழுவதற்குள் கடந்துவிட வேண்டும் என்ற வேகம் பிறக்கிறது. ஆகவே, சிவப்பு சிக்னலால் ஏற் கெனவே நின்று கொண்டிருக்கிற ஏகப்பட்ட வண்டிகளின் புறத்தே உங்கள் வண்டி நிற்கிற போது, வேகமாகக் கடக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களைக் கடந்து சென்றுவிடும். ஆகவே உங்கள் வண்டியோ நீங்களோ விபத்துக்கு உள் ளாகிற வாய்ப்பு குறைகிறது.
இந்த செல்போன் யுகத்தில், உங்கள் வண்டி வேகமாகச் செல்லும்போது சரியாக டவர் சிக்னல் கிடைப்பதில்லை. இதனால் சரியாகப் பேச முடிவதில்லை. இப்போது வாகனங் களின் நெருக்கடி காரணமாக நீங்கள் வெகுநேரம் நிற்க வேண் டியவதால், அந்நேரத்தில் செல்போன் வழியாக பேச வேண்டியதைப் பேசிவிடலாம். இதை மனதில் வைத்துதானோ என்னவோ எல்லா சாலைச் சந்திப்புகளிலும் டவர் சிக்னல் கிடைக்க தொலைபேசிக் கம்பெனிகள் ஏற்பாடு செய் திருக்கின்றன.
காத்திருக்கும் நேரத்தில், பக்கத்து வண்டிக்காரரிடம் “எந்தப் பக்கம் போனாலும் இதே ரோதனையாப் போச்சு,” என்று கூறுகிறீர்கள். “அதை ஏன் கேட்கிறீங்க, இப்ப எல்லாம் லீவு நாள்ல கூட கூட்டம் ஓய மாட்டேங்குது,” என்று அவர் பதிலளிக்கிறார். அவர் எந்த ஏரியா என்று விசாரிக்கிறீர்கள். உங்கள் ஏரியாதான் என்று தெரிய வருகிறது. உங் களுக்கிடையே ஒரு புதிய நட்பு மலர்கிறது. வண்டியை நிறுத்தாமல் போய்க்கொண்டே இருந்திருந்தால் இது நடந்திருக்ககுமா?
என்னதான் நீங்கள் வேலை முடிந்து ஆவலாக வீட்டுக்குப் போனாலும், அங்கே போய் சிறிது நேரத்தில் ஏதாவது அற்பப் பிரச்சனையில் சண்டை வரத்தான் போகிறது. டிராபிக் ஜாம் காரணமாக வீட்டிற்கு லேட்டாகப் போகும்போது, சாப்பிட்டோமா, கொஞ்சம் டிவி பார்த்தோமா, கண் செருகத் துவங்கியதும் படுக்கையில் சாய்ந்தோமா என்றுதான் உங்கள் “மூட்” அமையும். சண்டைக்கான காரணத்தைத் தேடுவதற்குக் கூட நேரம் கிடைக்காது.
வீட்டை விடுங்கள். வேறு யாருடனாவது சண்டை போடுவதற்குக் கூட நீங்கள் கோபமாகப் போய்க் கொண்டிருக்கலாம். டிராபிக்கில் நிற்கிற போது, அந்த எரிச் சலில் உங்கள் மன எரிச்சல் வடிகட்டப்பட்டுவிடும். இரண்டு நெகட்டிவ் சேர்கிற போது ஒரு பாசிட்டிவ் ஆகிவிடும் என்ற கணித சாஸ்திரப்படி இரண்டு கோபங்கள் சேர்ந்து சமன மாகும் போது உங்களுக்கு ஒரு பரிபக்குவ மனம் கிடைக் கிறது. கோபத்தால் ஏற்படும் உடல் உபாதையும் கரைந் துவிடுகிறது.
அதே போல், ஏதோ ஒரு ஏமாற்றத்தில், அல்லது யார் மீதோ உள்ள ஆத்திரத்தில் உங்களை நீங்களே கொலை செய்வது என்ற முடிவுடன் அதற்கு வசதியான இடம் தேடித் தான் புறப்பட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது போக்குவரத்து நெரிசலும் தேக்கமும் உங்களை மறு சிந்தனைக்குத் தூண்டும். நீங்கள் தற்கொலை முடிவைக் கைவிடுவீர்கள்.
காலையில் புறப்படும் போது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கினால், உரிய நேரத்திற்குள் உங்கள் அலு வலகத்திற்கோ, வேறு இடங்களுக்கோ போய்ச்சேர முடியாது என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருப்பீர்கள். ஆகவே வழக்கமான நேரத்தை விட முன்னதாகப் புறப்படுகிற பழக்கமும், அதற்காகப் படுக்கையில் இருந்து சீக்கிரம் எழுகிற பழக்கமும் உங்களைத் தொற்றிக் கொள்ளும். பாருங்கள், உங் கள் அம்மா அப்பா எப்படியெப்படியோ சொல்லியும் பாடமாகாத ஒரு பழக்கம் இப்போது உங்கள் நடைமுறையோடு படிந்தேவிடுகிறதே!
பச்சை சிக்னல் கிடைக்க நேரம் ஆகும் என்ற பட்டறிவால் உங்கள் வண்டியின் இயக்கத்தை நிறுத்தி வைப்பீர்கள். இத னால் உங்கள் பெட்ரோல் செலவு வெகுவாகக் குறையும். எரி பொருள் சிக்கனம் தேவை இக்கணம் என்பதால், நீங்கள் இன்ஜினை நிறுத்துவதன் மூலம் ஒரு தேசபக்தக் கடமையை நிறைவேற்றிய பெருமை உங்களைச் சேரும். உங்களைப் பார்த்து மற்றவர்களும் தங்களுடைய வண்டிகளை ஆஃப் செய்வார்கள். இதனால், தேசபக்தியைப் பரப்பிய புண்ணியம் உங்களை வந்து சேரும்.
சாலைச் சந்திப்பில் நிற்கும் வண்டி, பச்சை சிக்னல் விழுந்ததும் உடனே புறப்பட ஏதுவாக ட்யூன் செய் யப்பட்டிருக்க வேண்டும். அதற்காக நீங்கள் கண்டிப்பாக ஒரு மெக்கானிக்கிடம் வண்டியைக் கொடுப்பீர்கள். அவர் தம்மிடம் பணியாற்றும் இளம் மெக்கானிக்குகளிடம் வேலையைக் கொடுப்பார். பார்த்தீர்களா. டிராபிக் ஜாம் இப்படி பலரது வேலையின்மைப் பிரச்சனைக்குத் தீர்வாகிறது!
இப்படியாக இன்னும் பல நற்பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் எண்ணிப் பார்த்து, இனி போக்குவரத்து நெருக்கடி நேரங்களில் இறும்பூதெய்துங்கள். முடிந்தால் நீங்களே கூட டிராபிக் ஜாம் ஏற்படுத்த முயன்று, பலரது மனம் பக்குவம் அடைய வழி கோலுங்கள்.
அரசாங்கத்துக்குக் கூட நன்மை இருக்கிறது. வண்டிகள் நகர முடியாமல் ஊர்ந்து கொண்டிருக்கும்போது, சந்திப்புகளில் நின்றுகொண்டிருக்கும் போது, பலர் எதிர்காலத்தில் இப்படி ஏற்படாமல் தடுக்க என்ன செய்யலாம் என்ற ஆலோசனைகளை வழங்குவார்கள். எங்கே பாலம் கட்டலாம், எந்தப் பாலத்தை இடித்துவிடலாம், எந்தச் சாலையை ஒருவழிப் பாதையாக்கலாம், எத்தனை வண்டிகளுக்கு லைசென்ஸ் ரத்துச் செய்யலாம் (அவர்களது வண்டிகள் தவிர்த்து), எந்த அதிகாரியை மாற்றலாம், யார் யாரை எல்லாம் நிற்க வைத்துச் சுடலாம் .......... என்று எத் தனையோ யோசனைகளை அள்ளி வீசுவார்கள். உலகத்தில் எங்கெங்கே பக்காவான சாலைப் போக்குவரத்து மேலாண்மை இருக்கிறது என்ற பொது அறிவுத் தகவல்களையும் குவிப்பார்கள். அரசாங்கம் இந்த யோசனைகளை எல்லாம் திரட்டினால், உண்மையாகவே போக்குவரத்து நெருக்கடிச் சிக்கலைத் தீர்க்கக் கூடிய ஒரு உருப்படியான திட்டத்திற்கு வழி பிறக்கக்கூடும்.
சில பேர் ரொம்ப சீரியஸாக, பொதுத்துறைப் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்தி, மேம்படுத்துவதுதான் சரியான தீர்வு என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படுவது ஏசி பஸ்களும் டீலக்ஸ் பஸ்களும் அல்ல, கூட்ட நெருக்கடிக்கும் பிக்பாக்கெட்காரர்களின் கைங்கர்யத்திற்கும் இடமில்லாமல் சாதாரண பஸ்களையே போதுமான அளவுக்கு விட்டாலே போதும் என்பார்கள். பணிமனைகளில் முடங்கிக் கிடக்கும் பேருந்துக ளுக்குப் புத்துயிரூட்ட வேண்டும் என்று சொல்வார்கள். போதுமான தொழிலாளர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். இதுவரை போக்குவரத்துத் துறை பின்னுக்குப் போனது ஏன், முறைகேடுகள் ஏதேனும் உண்டா என்று ஆராய அறிவுறுத்துவார்கள். இன்னும் ஒரு படி மேலே போய், பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே குடியிருப்புகள் அமைக்கப்படுவது, எல்லாப் பகுதிகளிலும் சீரான தரமான அரசுப்பள்ளிகளை அமைப்பது ... போன்ற மாற்றுத் திட்டங்களையும் கூட முன் மொழிவார்கள்.
அவர்கள் வேண்டுமானால் சீரியஸாக இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கட்டும். அரசாங்கமோ, அமைச்சகமோ, அதிகாரிகளோ இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் இப்படிப்பட்ட மாற்றுக் கொள்கையைச் சொல்வது, மக்கள் காதுகளில் கேட்காமல் இரைச் சல்கள் எழுப்புவதற்குத்தான் பூசைகள், மதவாதக் கூச்சல்கள், யாராவது நடிகை ஏதாவது செய்ய அதற்கு எதிராகக் கிளப்பப்படும் கூப்பாடுகள், அவற்றையெல்லாம் பெரிதுபடுத்துகிற ஊடகங்கள் என்று என்னென்னவோ இருக்கின்றனவே.

No comments: