Sunday 18 November 2007

உண்மையை மறைக்கும் ஊடக நந்திகள்

அது ஒரு சிறிய அரங்கம். மேடையில் நிறுத்தப்பட்டுள்ளது ஒரு சிறிய வெண்திரை. அன்றைய விவாதப் பொருள்களுக்கான இரண்டு மூன்று ஆவணக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. அவற்றில் ஒரு படம் இவ்வாண்டு மார்ச் மாதம் மேற்கு வங்கத்தின் நந்திகிராமத்தில் நடந்த சம்பவங்கள் பற்றியது. முழுக்க முழுக்க ஒரு மனிதநேய விரோதச் செயல் நிகழ்த்தப்பட்டது போலவும், தங்களது நிலங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போராடிய அப்பாவி கிராம மக்கள் மீது கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது போலவும், மற்ற இடங்களில் அப்படி நடந்தால் கொந்தளிக்கிற மார்க்சிஸ்ட்டுகள் தாங்கள் ஆளும் மாநிலத்தில் மட்டும் அப்பட்டமாக அதே செயலைச் செய்வது போலவும் சித்தரித்த அந்தக் குறும்படத்தைத் தயாரித்தது (வேறு யார்) ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சித் தோழர் ஒருவர், திரையிடல் முடிந்ததும் நடந்த விவாதத்தில் பங்கேற்று, உண்மையில் நடந்தது என்ன என்று விளக்குகிறார். இடது முன்னணி அரசின் விளக்கத்தையோ, கம்யூனிஸ்ட்டுகளின் நிலைபாட்டையோ கேட்காமல் ஒரு தரப்பாக மட்டும் பதிவு செய்திருப்பது நடுநிலையானதுதானா என்று கேள்வி எழுப்புகிறார். அரசாங்கத்தின் கண்காணிப்பையும் இடது சாரிக் கட்சிகளின் அடிமட்டத் தொடர்புளையும் மீறி, மம்தா பானர்ஜி கட்சி, வலதுகோடி பாஜக, இடது கோடி மாவோயிஸ்ட்டுகள் முதலியோர் அங்கே அவ்வளவு விரிவாகக் களம் அமைக்க முடிந்தது எப்படி, அரசு நிர்வாகத்தையே அப்பகுதியில் முடக்குகிற அளவுக்கு அவர்கள் சேர்ந்தது எப்படி, ஜனநாயகத்தைப் புதைக்கிற வகையில் மறைந்திருந்து தாக்குவதற்கான பதுங்கு குழிகள் தோண்டப்பட்டது எப்படி, தேசத்தோடு அந்த மக்களைத் தொடர்பறுக்கும் விதத்தில் சாலைகளும் தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது எப்படி - என்பதையெல்லாம் கட்சி முனைப்புடன் ஆராய்கிறது என்றும் அவர் சொன்னார். பார்வையாளர்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டார்களோ, இல்லையோ அமைதியாகக் கேட்டுக் கொண்டார்கள்.அந்த இடத்தில் அப்படியொரு தோழர் இருந்ததால், அவரைப்போன்றவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிற ஒரு அமைப்பு அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்ததால், திரை ஊடகத்தின் ஊடாக ஒரு “தொண்டு” நிறுவனம் செய்ய முயன்ற மார்க்சிய எதிர்ப்புக் கருத்து ஊடுருவல் அங்கே அந்த அளவுக்குத் தடுக்கப்பட்டது. அந்தப்படம் திரையிடப்படக்கூடிய வேறு இடங்களில்? அப்படி வேறு இடங்களுக்குச் செல்கையில் அங்கே மார்க்சிஸ்ட்டுகள் வராமல் பார்த்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இதுவாவது இப்படிப்பட்ட குறும்படங்களில் ஆர்வமுள்ள ஒரு குறுங்கூட்டம் கலந்து கொண்ட நிகழ்ச்சி. பெரும்பகுதி மக்களைச் சென்றடையும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்ற பெரும் ஊடகங்கள் என்ன செய்கின்றன? அவைகளுக்குள் கடுமையான வர்த்தகப் மோதல்கள். ஒன்றையொன்று போட்டியில் விஞ்சுவதற்காக விலைக் குறைப்பு, கவர்ச்சிப்படங்கள், இலவசங்கள் என என்னென்னவோ உத்திகள். பொதுவாக ஊடகச் சுதந்திரம் பற்றிப் பேசினாலும் எதிராளி ஊடகம் தாக்குப் பிடிக்காமல் உதிர்ந்து போகாதா என்ற ஏக்கங்கள். இவ்வளவு போட்டி இருந்தாலும் ஒரு அம்சத்தில் அவைகளுக்குள் ஒற்றுமை. இடதுசாரிகளை - குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியை - மக்களிடமிருந்து தனிமைப்படுத்த முயல்வதில் ஒற்றுமை. பேசி வைத்துக் கொண்டு ஏற்படுத்திக் கொண்டது அல்ல என்றாலும், சிந்தனை அடிப்படையில், கோட்பாடு அடிப்படையில் - பச்சையாகச் சொல்வதானால் வர்க்க அடிப்படையில் - ஏற்பட்ட ஒற்றுமை அது.

நந்திகிராம் பிரச்சனை இவர்களது நோக்கத்திற்குத் தோதாகக் கிடைத்தது - வெறும் வாயை மென்றவர்களுக்கு பான்பராக் கிடைத்தது போல. மார்ச் மாதத்திலிருந்து எப்படியெல்லாம் அந்தப் பிரச்சனையை வெளிப்படுத்தி வருகிறார்கள் சொல்ல ஆரம்பித்தால் அவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியாது. இத்தகைய வெளிப்பாடுகளில், நந்திகிராம் மக்களின் வாழ்க்கை, வெளியேறியவர்கள் மீண்டும் ஊர் திரும்புதல் என்ற அக்கறையை விட, பிரச்சனையைக் கையாள்வதில் இடது முன்னணி அரசு தோல்வியடைந்துவிட்டது என்று வாசகர்கள்/நேயர்கள் மனங்களில் வார்க்க வேண்டும் என்ற ஆசையே விஞ்சி நிற்கிறது. மார்க்சிஸ்ட்டுகள்தான் தொடரும் வன்முறைக்குக் காரணம் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும் என்ற வக்கிரமும், அதன் மூலம் கட்சியை பலவீனப்படுத்துகிற குரூர இச்சையும் அந்த ஆசையில் கலந்திருக்கின்றன.

அதனால்தான், மேதா பட்கர்களையும், அபர்ணா சென்களையும் பெரிதாக முன்னிலைப்படுத்துகிற இவ்வூடகங்கள் புத்ததேவ், பிமன்பாசு விளக்கங்களை இருட்டடிக்கின்றன. மேற்கு வங்க ஆளுநர் கோபால் காந்தியின் அத்து மீறலை, நியாய ஆவேசம் போல் காட்டுகின்றன. பிரகாஷ் காரத் சொல்வதை முக்கியத்துவமின்றி வெளியிடுகின்றன.

ஆங்கில ஊடகங்களும் வட மாநில ஊடகங்களும் மட்டுமல்ல, தமிழ்கூறு நல்லுலக ஊடகங்களும் இதில் விதிவிலக்கல்ல. சம்பந்தமே இல்லாமல் டாட்டா கார் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து கிராம மக்கள் போராடி வருவதாக, சிங்கூருக்கும் நந்திகிராமத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது சூரியச் செய்தி நிறுவனம். (இடது சாரிகள் ஆதரவோடுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமையப் போகிறது என்பது தெரிய வந்த போது கம்யூனிஸ்ட்டுகள் இந்த அரசை “பிளாக் மெயில்” செய்வார்களா என்று திரும்பத்திரும்ப ஒளிபரப்பி தொலைக்காட்சி நிறுவனம் இது.)

தலைவர்கள் கருத்துக் கூறாவிட்டாலும் அவர்களால் நடத்தப்படுகிற ஒரு நாளேட்டின் "தலையங்க எழுத்தாளர்" இடது சாரிகளுக்கு எதிரான பகைமைக் கருத்தைப் பரப்பிடத் தமிழில் ஓசை எழுப்புகிறார். பாஜக, திரிணமூல் காங்கிரஸ், நக்சலைட் கூட்டணியின் சூழ்ச்சியை அடையாளம் காட்ட மறுத்துவிட்டு, புத்ததேவின் பிடிவாதத்தால்தான் நந்திகிராம் விவகாரம் தொடர்கிறது என்று மணியடிக்கிறது ஒரு தினசரி. அறிவுஜீவிகளால் அறிவுஜீவிகளுக்காக நடத்தப்படுகிற அறிவுஜீவி இதழ்களும் தம் பங்கிற்கு நந்திகிராம் நடப்புகள் குறித்துத் தமது வாசகர்களைக் குழப்புகின்றன.

இப்படியாகப்பட்ட ஊடகப் பெருவல்லாளர்களின் திட்டமிட்ட மறதிக்கு ஒரு எடுத்துக்காட்டுதான், “நந்திகிராம வன்முறைகளில் மாவோயிஸ்ட்டுகளுக்குப் பங்கிருக்கிறது,” என்று - ஒரு மார்க்சிஸ்ட் தலைவர் அல்ல - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. சீனிவாசன் சொல்லியிருப்பதை சொல்லாமல் மறைத்தது. எனக்குத் தெரிந்து ஒரே ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சிதான் அதை ஒரு வரியளவாவது சொன்னது. மேற்கு வங்கம் சென்றுள் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரி “நக்சலைட்டுகளின் பிடியில் நந்திகிராம் வட்டாரம் சிக்கியிருக்கிறது,” என்று கூறியிருப்பதையும் பெரும்பாலான ஊடகங்கள் பின்பக்கங்களுக்கும், தொலைக்காட்சிச் செய்தியின் அடிவரி ஓட்டத்திற்கும் தள்ளிவிட்டன.

அப்பாவி மக்களை அச்சுறுத்தும் அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் அதிரடிப் புரட்சிக்காரர்கள் கால் ஊன்ற உதவுவது தங்களுடைய பதவி தாக அரசியலுக்கு பயன்படும் என்று மம்தா வகையறாக்கள் கருதக்கூடும். ஆனால் அரசியல் புற்றுநோயை வளர விடுவதற்கான விலையை அவர்களே கூட கொடுக்க நேரிடும். அதன் சுமையும் வலியும் மக்கள் மீது தான் வந்து விழும். அப்போது - அந்தச் செய்தியையும் இதே ஊடகங்கள்தான் சொல்ல வேண்டியிருக்கும். அப்போதாவது உண்மையை சொல்வார்களா அல்லது, இந்த நிலைமை வந்ததற்கு சிபிஎம்-தான் காரணம் என்று கதைகட்டிக் கொண்டிருப்பார்களா?

1 comment:

Anonymous said...

Dear ASAK, In this semi feudal, semi colonial India nothing can be done even an CPM having the PM post. So stop your all "pulambals" and "Ullarals". The socialism will be brought by Naxalbaris only, not by any other Vote Begging marxists, and CPI and all. In 1960-70 CPI became traitors for Proletarisns. Now you CPM people for your rule in Bengal, and for some MLA, MP Posts. Yes there is Naxalbaris in NadhiGram not to become an MP,MLAbut to become the followers of our Bhagath Singh "He may be useful for you in BANNER ONLY". but the naxal are the true heirs of Bhagath Singh and true marxists. Here if your CPM Govt is true to Proletarian why still you have redlight areas in Kolkata. You people done nothing. You not taught true marxist thoughts to your cadres. You simply trained your cadres like Vijayakanth. His fans join in his party like that fans of Bhagath singh and some one have humanity joined but you have not trained like Bhagathsingh. You trained them like what BJP does.

By Veeran Tippu