Monday, 9 February 2026

எப்ஸ்டீன் தீவிலிருந்து புறப்பட்டு அனைவரையும் அச்சுறுத்தும் ஆவண ஆவி!

 



உல்லாச விடுதி அமைப்பது, உயர்பீடத்தினரை வரவழைப்பது, அவர்களின் வக்கிரப் பசிகளுக்கு இரை போடுவது, அவர்கள் மூலம் எண்ணற்ற சலுகைகளை அனுபவிப்பது, இந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தி அதிகாரத் தரகர்களாகப் பலருக்கும் பல வேலைகள் நிறைவேற வைப்பது…இப்படியாகப்பட்ட பெரும்புள்ளிகள் பற்றிக் கேள்விப்படுகிறோம். உள்நாட்டிலும் உலக அளவிலும் ஆன்மிகம், அரசியல், தொழில், கலாசாரம் என வெவ்வேறு முகங்களில் அவர்கள் வலம் வருகிறார்கள்.

அவ்வகையினரின் ஒரு தற்காலத்தியப் பிம்பம்தான் அமெரிக்காவின் ஜெஃப்ரி எப்ஸ்டீன். ஆறு ஆண்டுகளுக்கு முன் நியூயார்க் தெற்கு மாவட்டச் சிறையில் ஒரு கைதியாக, தனது 66-வது வயதில் மர்மமான முறையில் செத்துக்கிடந்த எப்ஸ்டீனின் ஆவி, இன்று பல்வேறு நாடுகளைச் சுற்றி வந்து பிரமுகர்களின் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டிருக்கிறது. காரணம் அது ஆவி வடிவத்தில் இல்லாமல், ஆவண வடிவத்தில் அலைகிறது.

“எப்ஸ்டீன் கோப்புகள்” எனப்படும் அந்த ஆவி எங்கெல்லாமோ சுற்றி, இந்திய நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் எட்டிப் பார்த்திருக்கிறது. இந்தக் கோப்புகள் எங்கிருந்து வந்தன? ‘ஃபைனான்சியல் டிரஸ்ட் கம்பெனி‘ என்ற மிகப்பெரிய நிதி மாற்று நிறுவனத்தை நடத்தி வந்தவர் எப்ஸ்டீன். 1982-ல் “ஜே. எப்ஸ்டீன் அண்டு கம்பெனி” என்று தொடங்கியவர், 1996-ல் அதன் பெயரை மாற்றினார். அமெரிக்காவிலும் பல்வேறு நாடுகளிலும் உள்ள பெரும் பணக்காரர்கள்தான் வாடிக்கையாளர்கள்.


தொடக்கத்தில் சாதாரண பணக்காரர்களையும் தன் வாடிக்கையாளர்களாகச் சேர்த்துக்கொண்ட அவர், பிற்காலத்தில் மிகப்பெரும் செல்வந்தர்களுக்கானதாக மட்டும் நிறுவனத்தை மாற்றினார். ஒரு பில்லியன் டாலர் (சுமார் 8,000 கோடி ரூபாய்) சொத்து வைத்திருப்பவர்கள்தான் அதில் இணைய முடியும்.

பெரும் கார்ப்பரேட் முதலாளிகள், அரசியல் பெருந்தலைகள், பல துறை நட்சத்திரங்கள் இணைந்தார்கள். அவர்கள் செலுத்திய சேவைக் கட்டணங்களால்தான் எப்ஸ்டீனிடம் கிட்டத்தட்ட 600 மில்லியன் டாலர் (5,000 கோடி ரூபாய்) சொத்து சேர்ந்தது.


 வாடிக்கையாளர் சேவை மையம் ஒன்றில் கணித ஆசிரியராக வேலை செய்துகொண்டிருந்தவர் எப்ஸ்டீன். ஒரு கட்டத்தில் நிதிக் கணக்குகளைக் கையாளும் சூட்சமங்களைக் கற்றார். அப்படிக் கற்றபின் அதற்குத் தக நிற்பதற்கென்று, அவர்களின் கணக்குகளில் தில்லுமுல்லுகள் செய்வதற்கு உதவினார். கணக்கில் வராத வருமானத்தை வரிவிதிப்பிலிருந்து தப்பிக்க வைப்பது, பணம் எங்கேயிருந்து வந்தது என்று கேட்காத, வரிச் சட்டங்களுக்கு உட்படாத வங்கிகளுக்கு மாற்றுவது, வரவு செலவுக் கணக்கை எப்படி எழுதிவைத்தால் அரசாங்கங்களுக்கு வரி கொடுக்காமல் முழுசாக அனுபவிக்கலாம் என்றெல்லாம் நிதி நிர்வாக ஆலோசனைகளை அளித்தார்.

அந்தக் கம்பெனி செயல்பட்டதே, வரிவிலக்கு சொர்க்கம் என்று சித்திரிக்கப்படும் வர்ஜீனிய தீவுகளில்தான். இந்தத் தீவுகளில் அமெரிக்காவுக்குச் சொந்தமானவையும் பிரிட்டனுக்கு உடைமையானவையும் இருக்கின்றன. இரு நாடுகளின் தீவுகளிலும், வருமானத்திற்கு “0” சதவிகித வரிதான். தொழில் நிறுவனங்கள் என்ற பெயரில், உலகில் எந்த மூலையிலும் தொழிற்சாலையோ வணிக வளாகமோ இல்லாமல் சும்மா ஒரு அறையை மட்டும் அலுவலகமாக வைத்துக்கொண்டு, வாடிக்கையாளர்களின் பணத்தை இப்படிப்பட்ட வங்கிகளுக்கு மாற்றுவதையே தொழிலாக நடத்துகிறவர்கள் அத்தீவுகளில் இருக்கிறார்கள். அவர்களால் எட்ட முடியாத உயரத்துக்குப் போனவர் எப்ஸ்டீன்!

பல பெரிய முதலாளிகள் செய்கிற இன்னொரு ஏற்பாட்டையும் அவர் செய்திருந்தார். தனது நிறுவனத்திற்கு ஒரு கௌரவத்தை ஏற்றும் வகையில், ஆராய்ச்சிக் கருத்தரங்குகள், சுற்றுச் சூழல் மாநாடுகள், கலை இலக்கிய மேடைகள் என்றெல்லாம் நடத்தி, பல பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், பொது அக்கறையாளர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பல தரப்பினரையும் வரவழைத்தார். அவர்களின் சொந்தப் பயணங்களுக்குத் தனது சொந்த விமானத்தைக் கொடுத்தார். இம்மாதிரியான உத்திகளோடு நின்றிருந்தால் கூட, “பிசினஸ்ல இதெல்லாம் சகஜமப்பா” என்பதாகப் போயிருக்கும்.

ஆனால்…

வேட்டை சேவை
பெருந்தன வாடிக்கையாளர்கள் அனுபவித்த மற்றொரு சேவையும் அவருக்குப் பணம் பாயும் வாய்க்காலானது. அவர்களுடைய பாலியல் வேட்கைக்கான சேவை அது. அதற்கென்றே அனைத்து சொகுசு வசதிகளுடனும் ஓர் உல்லாச மாளிகையைக் கட்டியிருந்தார். வேட்டைக்கு இரையானவர்கள் சிறுமிகள், இளம் பெண்கள். பல்வேறு நாடுகளிலிருந்தும் கடத்திக் கொண்டுவரப்பட்டவர்கள்.


 ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பலர், உயர் கல்வி பெற எப்ஸ்டீன் தன் அறக்கட்டளை மூலம் உதவி நல்குவார், விளம்பர நட்சத்திரங்களாக ஆவதற்கு நிறுவனங்களிடம் பரிந்துரைப்பார், ஊதியமாகப் பெரும் பணத்தைப் பெற்றோர்களுக்கு அனுப்பி வைப்பார் என்றெல்லாம் ஆசை காட்டிக் கொண்டுவரப்பட்டார்கள்.

அவர்களுக்கு இணக்கமான சூழலை ஏற்படுத்துவதற்காக, எப்ஸ்டீனுக்கு மட்டும் கைகால் பிடித்துவிடுகிற, முதுகு மிதித்துவிடுகிற வேலைகள் தரப்படும். பிறகு படிப்படியாக விருந்தினர்களுக்கு அதே வேலைகளைச் செய்ய வேண்டும். பின்னர் அவர்களுக்கு விருந்தாக வேண்டும். அதற்காகப் பணத்தை வீசுவது, கட்டாயப்படுத்துவது, அடித்துத் துன்புறுத்துவது என எல்லா வழிகளும் கையாளப்படும். “இங்கே நடப்பதை வெளியே சொன்னால் ஊரில் இருக்கிற உங்கள் குடும்பங்களுக்குச் சிக்கல் ஏற்படுத்துவோம்…”, “எங்களை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது… அதிகாரிகள் எங்கள் கையில்…” என மிரட்டப்படும்.

கூட்டாளியாக மாறிய காதலி

அவர்களால் தப்பித்து ஓட முடியாது. அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளையும் கல்விச் சான்றிதழ்களையும் நிர்வாகம் கைப்பற்றி வைத்திருக்கும். இதையெல்லாம் கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருந்தவர் ஜிஸ்லேன் மேக்ஸ்வெல். பிரிட்டனில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும் ஊடக நிறுவன முதலாளியுமான ராபர்ட் மேக்ஸ்வெல் என்பவரின் மகள். எப்ஸ்டீனின் முன்னாள் காதலி. அந்தக் காதல் உறவை முறித்துக்கொண்டாலும், தொழில் உறவு தொடர்ந்தது. எப்ஸ்டீனின் உயிலில் இவர் முக்கியமான ஒருவராகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்த முக்கியத்துவம், பெண் என்பதால் நம்பிக்கையோடு பழகியவர்களை விடுதியின் சேவைகளில் தள்ளிவிட்டதால் மட்டும் வந்ததல்ல, எப்ஸ்டீனுக்கே அறிமுகமாகாத பலநாட்டுப் பெரும்புள்ளிகளைத் தீவுக்குக் கொண்டுவந்ததாலும் ஏற்பட்டது. பிரிட்டன் அரண்மனைக் குடும்பத்தின் இளவரசர் ஆண்ட்ரூ உட்படப் பலரும் ஜிஸ்லேன் மூலமாகவே எப்ஸ்டீன் வாடிக்கையாளர்களானார்கள்.

வழக்கின் அதிர்வலை
எல்லாம் இவர்கள் வரைந்த கோடுகளிலேயே போய்க்கொண்டிருக்க அதைத் தடுத்து நிறுத்தியவர், இவர்களால் பாலியல் வக்கிரப் படுக்கையில் தள்ளப்பட்டவரான வர்ஜீனியா ஜிஃப்ரே. 2015-ம் ஆண்டில் அவர், “என்னை மேக்ஸ்வெல் ஒரு பாலியல் அடிமையாக எப்ஸ்டீனுக்கும் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோருக்கும் விற்பனை செய்தார்,” என வெளிப்படையாக அறிவித்தார். இதை மறுத்த மேக்ஸ்வெல், “வர்ஜீனியா ஒரு பொய்யர்,” என்றார். தன் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி அவமதித்ததாக மேக்ஸ்வெல் மீது வர்ஜீனியா வழக்குத் தொடுத்தார். ஒரு சாதாரணமான மான நட்ட வழக்காகத் தொடங்கியதுதான் இன்று உலக அளவில் அதிர்வலைகளைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது.

நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில், தனது குற்றச்சாட்டு உண்மை என்று நிறுவுவதற்கான ஆதாரங்களாக வர்ஜீனியா சில ஆவணங்களைத் தாக்கல் செய்தார். அந்த ஆவணங்கள் பல பெரும்புள்ளிகள் வந்துபோயிருப்பதை அம்பலப்படுத்தின. எப்ஸ்டீன் 2019 ஜூலையில் கைது செய்யப்பட்டு, சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டார். அதற்கு முந்தைய ஆண்டிலும் அவர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலும் பகல் நேரங்களில் மட்டும் அலுவலகம் சென்று வர அனுமதிக்கப்பட்டார். சட்டத்தைக் கேலி செய்வதாக அந்தத் தண்டனை இருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்தபோதிலும், 13 மாதங்களில் அவர் விடுவிக்கப்பட்டார். அவ்வளவு செல்வாக்கு!

ஆனால், மறுபடியும் விசாரணைக் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டபோது, அவருக்குப் பிணையில் வெளியே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. மேலும் ரகசியங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் ஒரே மாதத்தில், 2019 ஆகஸ்ட் 10-ல், அவர் இறந்துகிடந்தார். அது இயற்கையான மரணமா, தற்கொலையா, உண்மைகளைப் புதைப்பதற்காகச் செய்யப்பட்ட சிறைக்கொடுமைக் கொலையா?

அந்தத் தேதியில் சிறையில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாதது, காவலர்கள் உறங்கிக்கொண்டிருந்தது என்ற துணைப் புதிர்களுடன் மர்மம் நீடிக்கிறது. எப்ஸ்டீன் மரணத்தைத் தொடர்ந்து தலைமறைவானார் மேக்ஸ்வெல். 2020 ஜூலையில் நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் ஒரு பண்ணை வீட்டில் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்த புலனாய்வுத் துறையினர் அவரைக் கைது செய்தனர். ஓராண்டுக்கும் மேலாக நடந்த விசாரணையில் நீதிமன்றம் 2021 டிசம்பரில் “தூண்டுதல், ஆட்கடத்தல்” உள்ளிட்ட 5 புகார்களில் அவர் குற்றவாளி என்று அறிவித்தது. மேல்முறையீடுகள், விசாரணைகளுக்குப் பிறகு, 2022 ஜூன் மாதம், அவருக்கு இருபதாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இப்போதும் அவர் சிறையில்தான் இருக்கிறார் – எப்ஸ்டீன் கதி தனக்கும் நேருமோ என்ற அச்சத்துடன்.

மூடிவைக்கப்பட்ட கோப்புகள்

இதில் இன்னொரு பரபரப்பும் நிகழ்ந்தது. ஆவணங்களில் வழக்குக்கு அப்பாற்பட்டவர்களது பெயர்கள் இருப்பதால், அவற்றை வேறு யாரும் பார்க்கக் கூடாது என்ற சட்டத்தைக் காட்டி, அவற்றை முத்திரையிட்ட உறைகளில் மூடி வைத்தது நீதிமன்றம். பலர் தங்களுடைய பெயர்களை வெளியிடக்கூடாது என்று கோரும் மனுக்களையும் அளித்திருந்தனர். சட்டக் காரணங்கள் இருந்தபோதிலும், செல்வாக்குப் பேர்வழிகளைப் பாதுகாப்பதற்காகவே நீதிமன்றம் ஆவணங்களை நிறுத்திவைத்திருக்கிறது என்று சமூகச் செயல்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களாலும் கடுமையாக விமர்சித்தனர்.




 தொடர்ந்த போராட்டங்களின் வெற்றியாக, 2023-ம் ஆண்டில், நீதிபதி லோரெட்டா ப்ரெஸ்கா அதிரடியாக ஓர் ஆணையைப் பிறப்பித்தார். ஆவணங்களின் பல தகவல்கள் ஏற்கெனவே பொதுவெளிக்கு வந்துவிட்டதாலும், சமூக நலன் தொடர்பானதாக இருப்பதாலும் அனைத்து ஆவணங்களையும் வெளியிட 2023 டிசம்பர் 18-ல் ஆணையிட்டார். அடுத்த ஜனவரி முதல் வாரத்தில் 950 பக்கங்கள் கொண்ட முதல் தொகுப்பு வெளியிடப்பட்டது. அவற்றில் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களும், குற்றங்களைச் செய்தோர்களுமாக 170 பேரின் பெயர்கள் உள்ளன.

இப்படி ஆயிரத்துக்குக் கொஞ்சம் குறைவாக வெளியிடப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை இப்போது கிட்டத்தட்ட 30 லட்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்னமும் இதே எண்ணிக்கையிலான ஆவணங்கள் வெளிவர வேண்டியுள்ளது. இத்தனை லட்சம் ஆவணங்கள் என்றால் மின்னஞ்சல் தகவல்கள், தொலைபேசி உரையாடல்கள், காணொளிப் பதிவுகள், புகைப்படங்கள், கடிதங்கள் எனப் பல வகையாக இருக்கின்றன.
ட்ரம்ப் சவடால்

இதில் இன்னொரு விளையாட்டும் நடந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்பு எப்ஸ்டீனின் உற்ற நண்பர்களில் ஒருவராகத்தான் இருந்தார். பின்னர் அந்த நட்பைத் துண்டித்துக்கொண்டார். வர்ஜீனியா தீவு உல்லாச மாளிகைக்கு ஒருபோதும் சென்றதில்லை என்றும் கூறினார். ஆவணங்களில் அவருடைய பெயரும் இருக்கிறது என்று சொல்லப்பட்ட நிலையில், “மறைப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. அவற்றை வெளியிடுவதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை,” என்று அறிவித்தார்.

ஆயினும், அவரது அதிகாரத்துக்கு உட்பட்ட நீதித்துறை அலுவலர்கள் அவற்றை முடக்கினார்கள். உள்நாட்டுப் பாதுகாப்புக்காக, ரகசியக் காப்புக்காக என்று காரணங்களைக் கூறிக்கொண்டார்கள். உரத்த கண்டனங்களுக்குப் பிறகு, அமெரிக்க நாடாளுமன்றம், “எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மைச் சட்டம்” என்ற ஒரு சட்டத்தையே நிறைவேற்றியது. வேறுவழியின்றி அந்த ஆவணங்களையும் வெளியிட வேண்டியதாயிற்று.

ஏற்கெனவே குறிப்பிட்டது போல பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ, அமெரிக்க முன்னாள் அரசுத் தலைவர் பில் கிளின்டன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ், இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுட் பராக், அமெரிக்காவின் மிகப்பெரிய வழக்குரைஞர் ஆலன் டெர்ஷோவிட்டீஸ் உட்படப் பல்வேறு துறைகளைச் சார்ந்த, உலகின் பல பெரும் பணக்காரர்களின் பெயர்கள் அதில் வந்துள்ளன. இதனிடையே, பாதிக்கப்பட்ட பல பெண்கள், தங்களுடைய பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது என்ற நீதிமன்ற உறுதிமொழி மீறப்பட்டுவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள்.


 பிரதமரும், அறிவியலாளரும்…

இப்படி வெளியான ஆவணங்களில், புகழ்பெற்ற பேரண்ட அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் போன்றோரின் பெயர்களும் இருப்பது இயல்பான கவலையை ஏற்படுத்துகிறது. அதே போல், இந்திய மக்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி பெயர் இருப்பதாக வந்துள்ள செய்தி கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல ஆன்மிகம் முதல் அரசியல் வரையில் சித்து விளையாட்டுகளைச் செய்கிறவர்கள், தங்களுக்கு உள்ள மேலிடச் செல்வாக்கைக் காட்டிக்கொள்வதற்காக அப்படிப்பட்ட மேலிடத்தவர்களைச் சந்திப்பது, படம் எடுத்துக்கொள்வது, அந்தப் படங்களை வெளியிடுவது என்ற தந்திரங்களைக் கையாளுவார்கள். அப்படித்தான், கருத்தரங்குகளுக்காக ஹாக்கிங் போன்றோரை அழைத்துப் பேச வைத்தார். நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அழைப்பை ஏற்றுச் சென்றவர்களுக்கு எப்ஸ்டீனின் நிழலுக சாம்ராஜ்ஜியம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதே போன்று, பிரதமர் மோடி அந்தத் தீவுக்குச் சென்றதாக அந்தக் கோப்புகளில் குறிப்பு ஏதும் இல்லை. மாறாக, ஒரு மின்னஞ்சல் தகவலில் அவருடைய பெயர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதில் பொதுவாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இப்படியாகப் பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே, அவர்கள் எல்லோருமே எப்ஸ்டீனின் சேவைகளைப் பெற்றவர்கள்தான் என்று முடிவுக்கு நாம் வந்துவிட முடியாது. அப்படி வந்துவிட முடியாது என்பதாலேயே, யாருக்குமே அப்படிப்பட்ட தொடர்புகள் இருக்காது என்ற தீர்மானத்துக்கும் சென்றுவிட முடியாது. இதில் அனுமானங்களுக்கு இடமில்லை. ஆவணங்களே அதைத் தீர்மானிக்கும்!

இந்தியக் குடிமக்களைப் பொறுத்தவரையில், இந்தப் பிரச்னை கிளப்பப்படுகிறதென்றால் பிரதமர் நாடாளுமன்றத்தில் நேரடியாகத் திட்டவட்டமாக மறுத்துக் கம்பீரமாக நடை போடலாமே என்றுதான் கருதுகிறார்கள். கேள்வி கேட்பவர்களை எதிர்க்கட்சியினர் என்று பார்க்காமல், மக்களின் பிரதிநிதிகள் என்று மதிக்கிற அரசியல் பண்பு எப்போது இங்கே நிலைபெறுமோ?


 எங்கிருந்து வருகிறார்கள்?

இன்னும் யார் யாருடைய பெயர்கள் வரும், எந்தெந்த நாடுகளில் எப்படிப்பட்ட எதிர்வினைகள் எழும் என்ற வினாக்கள் பின்தொடர்கின்றன. அவற்றை விட முக்கியமான இரண்டு வினாக்கள் இருக்கின்றன. எப்ஸ்டீன்கள் எப்படித் தலையெடுக்கிறார்கள்? அவர்களால் அரசியலிலும் சமுதாயத்திலும் எத்தகைய தாக்கங்கள் விளையும்?

முந்தைய சமுதாய அமைப்புகளிலும் அந்தப்புற மாளிகைகள் இருந்திருக்கின்றன. மன்னர்கள் தங்களின் களியாட்டத்திற்காகவும், விருந்தினர்களை மகிழ்விப்பதற்காகவும் அந்த மாளிகைகளில் பெண்களை அடிமைகளாக வைத்திருந்திருக்கிறார்கள். ஆனால், முதலாளித்துவச் சமுதாயம் உருவெடுத்த பிறகு, எல்லாமே விற்பனைப் பண்டமாகிவிட்டது. பண்பாடும் கூட! உழைப்பாளிகள் ஒரு வகைப் பண்டம். எளிய மனிதர்கள் – குறிப்பாகப் பெண்கள் – பண்டங்கள்தான். இதில் கார்ப்பரேட்–அரசியல்–குற்றவியல் என்ற நச்சுக் கூட்டும் இருக்கிறது. ஆகவே இதைத் தனிமனிதப் பேராசைக் குற்றமாக மட்டும் பார்ப்பதற்கில்லை, இதில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதைத் தட்டிக்கழிப்பதற்கில்லை.

இதன் தாக்கங்கள் எப்படி அமையும் என்றால், அரசியலைப் பொறுத்தவரையில், பல இடங்களில் தவறு நடக்காமல் இருப்பதற்கான – அதாவது பெயர்கள் கசிந்துவிடாமல் இருப்பதற்கான எச்சரிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கலாம். முதலாளித்துவத்தில் தப்பு செய்வது தப்பல்ல, மாட்டிக்கொள்வதுதான் தப்பு! சுரண்டல் அமைப்பு தொடரும் வரையில் எப்ஸ்டீன்கள் வந்துகொண்டே இருப்பார்கள். மக்களைப் பொறுத்தவரையில், அரசமைப்பு, ஜனநாயகம் ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை இழப்பார்கள். அவற்றால் இப்படிப்பட்டவர்களைத் தடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் மேலோங்கும்.



அது, புரட்சிகரமான மாற்றத்திற்காகச் செயல்படத் தூண்டுமானால் வரலாற்றுக்கு நல்லது. இல்லையெனில், சமூக வாழ்க்கைக்குக் கேடாகிவிடும். எதைச் செய்தாவது பெரும்பணம் சேர்த்துவிட வேண்டும் என்ற வெறி ஊன்றப்படுமானால், அது எளியோரை, குறிப்பாகப் பெண்களை நுகர்பொருட்களாக மட்டுமே நடத்துகிற வக்கிரத்தையும் வன்மத்தையுமே வளர்த்துவிடும் – பொள்ளாச்சி முதல் வர்ஜீனியா வரை இதற்குச் சாட்சி. ஆம் – எப்ஸ்டீன் தீவு ஆவணங்களை ஒரு விறுவிறுப்பான, சுவையான செய்தியாக மட்டும் கடந்துவிட முடியாது.


[0]

விகடன் ப்ளஸ் தளத்தில் எனது கட்டுரை


No comments: