[‘விகடன்’ டிஜிட்டல் ஜூன் 22, 2025 பதிப்பில் வந்துள்ள எனது கட்டுரை]
ஆங்கிலம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. “இந்த நாட்டில் ஆங்கிலம் பேசுகிறவர்கள், விரைவில் அதற்காக வெட்கப்படுகிற ஒரு சமுதாயத்தை நாம் வாழும் காலத்திலேயே பார்க்கத்தான் போகிறோம். நம் நாட்டின் மொழிகள் நம் கலாசாரத்தின் ஆபரணங்கள் என்று நான் நம்புகிறேன். அவை இல்லாமல் நாம் பாரத மக்களாக இருக்க முடியாது. நமது நாடு, இதன் வரலாறு, இதன் கலாசாரம், இதன் தர்மம் இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமானால், அந்நிய மொழிகளில் அது முடியாது” என்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் (ஜூன் 19) அமித் ஷா பேசினார்.
ஐஏஎஸ் அதிகாரி ஆஷுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய “மெய்ன் பூண்ட் ஸ்வயம், குத் சாகர் ஹூன்” (நான் சிறு துளி, நானே பெரும் கடல்) என்ற புத்தக வெளியீடு அது. அமித் ஷா இவ்வாறு பேசிய காணொளிப் பதிவை ஏஎன்ஐ செய்தி முகமை நிறுவனம் தனது X தளத்திலும், செய்தியைத் தனது வலைத்தளத்திலும் வெளியிட்டது, பின்னர் விலக்கப்பட்டது என்று ‘தி ஹிண்டு’ தெரிவிக்கிறது. ஏன் விலக்கப்பட்டது என்று தெரியவரவில்லை. “சுயமரியாதையுடன் நாம் நமது மொழிகளிலேயே நம் நாட்டை நடத்திச் செல்வோம், உலகத்தையும் இட்டுச்செல்வோம்,” என்று ஷா பேசியதாகவும் ‘தி ஹிண்டு’ செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாகப் பார்த்தால் அவருடைய இந்தக் கருத்து வரவேற்கத் தக்கதுதான். எந்தவொரு நாடும் தனது சொந்த மொழிகளின் வலிமையிலேயே முன்னேறிச் செல்ல வேண்டும், வேற்று மொழிகளால் அல்ல, குறிப்பாக அடிமைப்படுத்தி அடக்கியாண்ட ஒரு அரசின் அடையாளமாக உள்ள மொழியால் அல்ல என்ற சிந்தனையை யார் மறுக்கப் போகிறார்கள்? அறிவியல் கண்ணோட்டத்துடன் தாய் மொழியையும் பிற மொழிகளையும் அணுகக்கூடிய எவரும் இதை ஏற்பார்கள்.
வீட்டிலும் அதே “கல்ச்சர்”
பொது இடங்களில் மட்டுமல்லாமல், வீடுகளிலேயே கூட ஆங்கிலத்தில் உரையாடும் “கல்ச்சர்” பரவியிருக்கிறது. உயர்நிலை (அதாவது உயர்ந்த கட்டண நிலை) தனியார் பள்ளிகளின் வளாகங்களுக்குள், மாணவர்கள் ஆங்கிலத்தில் அல்லாமல் சொந்த மொழியில் பேசினால் தண்டம் செலுத்தவும், முட்டிக்கால் போட்டு உட்காரவும் ஆணையிடப்படுவார்கள். அப்படிக் கறாராக நடத்தினால்தான் எதிர்காலத்தில் யுஎஸ், யுகே, கனடா, ஆஸ்திரேலியா என்று போகிற பிள்ளைகள் அங்கே “ஃபுளூயன்ட் இங்கிலீஷ்” பேச முடியும் என்று பெற்றோர்கள் தண்டனையை ஏற்றுக்கொண்டு தண்டத்தைக் கட்டுவார்கள்.
இந்தப் பள்ளிப் பழக்கம் வீட்டுக்குள் தொற்றுகிறது. குடும்பச் சூழலிலும் ஆங்கில உரையாடல் இருந்தால்தான் பசங்கள் எளிதாகவும் விரைவாகவும் கற்பார்கள் என்று நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துகின்றன. இப்படியாக, வெளிநாடுகளில் பொது இடங்களில் எல்லோரும் அவரவர் மொழியில் பேசிக்கொண்டிருக்க, யாராவது இரண்டு பேர் ஆங்கிலத்தில் பேசுவார்களானால் அவர்கள் இந்தியர்களாக இருப்பார்கள், குறிப்பாகத் தமிழர்களாக இருப்பார்கள் என்ற அங்கதமே உண்டு.
தமிழில்தான் சொல்வளம் வறண்டுவிட்டதா, அல்லது அவர்களுக்குத்தான் சொல்லறிவு தேங்கிவிட்டதா என்று நினைக்கும் அளவுக்குத் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. ஓடிடி தளங்களில் பார்த்தால் அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஆங்கிலப் பெயர் சூட்டப்பட்ட படங்கள் வரிசை கட்டுகின்றன.
சென்னை மாநகர மையச் சாலைகளிலும் வீதிகளிலும் தமிழில் பெயர் எழுதப்பட்ட (தமிழ்ப் பெயர் சூட்டப்படுவதைச் சொல்லவில்லை) கடை வாசல்களைக் காண்பது அரிதான காட்சியாகிவிட்டது.
நிலைமை இப்படி இருக்கிறபோது, உள்துறை அமைச்சரின் இந்தப் பேச்சு பொருள் பொதிந்ததாகவே இருக்கிறது. ஆனாலும், “கையைக் கொடுங்கள் அமித் ஷா,” என்று மனமுவந்து, முழு நிறைவோடு கொண்டாடி வரவேற்க இயலவில்லையே! இந்தப் பேச்சின் உள் நோக்கம் என்னவாக இருக்கும் என்று யோசிக்க வைக்கிறதே!
இந்தியர்களும் ஹிந்தியர்களும்
ஏனென்றால், இந்திய மொழிகள் அனைத்திற்கும் சம மதிப்பும், சம வாய்ப்பும் என்ற ஒரு கொள்கை நிலைக்கு வந்து இப்படிப் பேசியிருந்தால் மகிழ்ந்து கைகுலுக்கலாம். ஆனால், என்ன இனம், என்ன மாநிலம், என்ன மொழியானாலும் நாமெல்லாம் “இந்தியர்கள்” என்ற பன்மைத்துவ உணர்வோடு இந்தக் கருத்து வந்ததாகக் கருத முடியவில்லை.
மாறாக, எல்லோரும் “ஹிந்தியர்கள்” என்று நிறுவ முயலும் ஒற்றைத்துவ நோக்கத்திலிருந்தே வந்திருக்கிறது என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. அப்படித்தானே, கடந்த காலத்திலிருந்தே, ஹிந்தி மொழியின் மீதே ஒரு பகுதி மக்களுக்கு வெறுப்பு ஏற்படும்படி செய்திருக்கிறார்கள்.
இவர் அமைச்சராக உள்ள ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரும் புதிய சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் சூட்டப்படுகிறது. ஆங்கிலப் பெயர் வேண்டாம், சொந்த மொழிகளில் இருக்கட்டும் என்பது ஏற்கத்தக்கது. ஆனால், ஹிந்தி மட்டுமே இந்திய மொழி அல்ல. அனைத்து மாநில மக்களும் மகிழ்ந்து வரவேற்கும் வகையில், ஒரு சுழற்சி முறையில் ஒவ்வொரு சட்டத்திற்கும் திட்டத்திற்கும், இந்த்தியாவின் ஒவ்வொரு மொழியாகப் பெயர் சூட்ட வேண்டியதுதானே? அப்படியொரு கொள்கையை உருவாக்க வேண்டியதுதானே?
மாநிலங்கள் இணைந்த ஒன்றிய கூட்டாட்சி என்ற அரசமைப்பை ஏற்றுள்ள பெருமைக்குரிய நாடு இந்தியா. மாநிலங்களின் மொழிகளுக்கு சம மரியாதை அளிக்கப்படுவதில்தான் அந்தப் பெருமை நிலைத்திருக்கும். ஆனால், நாட்டின் விடுதலைக்கு முன்பே மாகாணங்களில் ஹிந்தியைப் புகுத்தும் முயற்சி தொடங்கியது. சென்னை மாகாணத்தில் ராஜாஜி மூலம் அன்றைய காங்கிரஸ் தொடங்கிய முயற்சி அப்போது முறியடிக்கப்பட்டது வரலாறு.
விடுதலை பெற்ற இந்தியாவிலும் ஒன்றிய காங்கிரஸ் அரசு இதைச் செய்ய முயன்றது, மக்கள் இயக்கங்களின் உறுதியான எதிர்ப்பால் அது கைவிடப்பட்டு, இருமொழிக் கொள்கை கொண்டுவரப்பட்டது. ஆயினும் ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு, அங்கெல்லாம் வரக்கூடிய பொதுமக்களுக்கும் கூட, கற்றுத் தருவதற்கென தினமொரு ஹிந்திச் சொல்லும், வாக்கியமும் எழுதிப்போடுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இன்று காங்கிரஸ் கட்சியும் இப்படிப்பட்ட ஹிந்தித் திணிப்பை எதிர்க்கிற நிலையில், முன்னோடிகளை விடவும் தீவிரமாக அந்தத் திணிப்புக் கைங்கரியங்களை ஒன்றிய பாஜக அரசாங்கம் செய்துவருகிறது. நேரடியாகவும் விசுவாசிகள் மூலமாகவும் ஹிந்திதான் தேசிய மொழி என்ற எண்ணத்தைப் பதிக்கிற உத்திகள் தொடர்கின்றன.
நிதி ஒதுக்கீடுகளில்
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் சில அமைப்புகள் சேகரித்த விவரங்களின்படி, 2023–24ஆம் ஆண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், இந்திய மொழிகள் மேம்பாட்டு நிறுவனங்கள் அனைத்திற்குமாக ஒதுக்கப்பட்ட நிதி 300 கோடி ரூபாய் (முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் அதிகம்தான்). ஹிந்தி இயக்குநரகத்திமற்கு மட்டும் ஒதுக்கப்பட்டது ரூ.39.47 கோடி ரூபாய்.
இந்திய மொழிகள் மேம்பாட்டுக்கான நிறுவனங்களில் மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், கேந்திரிய ஹிந்தி சன்ஸ்தான், தேசிய உருது மேம்பாட்டு நிறுவனம், தேசிய சிந்தி மேம்பாட்டு மையம், மத்திய செம்மொழி நிறுவனம், இந்திய மொழிகள் மத்திய நிறுவனம், இந்திய மொழிகளில் தரமான உயர் கல்விக்கான தேசிய முன்னெடுப்பு அமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன.
இந்த நிறுவனங்களுக்குள்ளேயே ஹிந்தி மேம்பாட்டு அமைப்புகளும் இருப்பது கவனத்திற்குரியது. இவை எல்லாவற்றுக்குமாக 300 கோடி ரூபாய் ஒதுக்கிவிட்டு, ஹிந்தி இயக்குநகரகத்திற்கு மட்டுமாக 39.47 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதை எப்படி நியாயப்படுத்துவது? (செய்தி: ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’, 2023 பிப்.3).
குடிமக்களின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், மாநிலங்கள் தங்கள் மொழிகளிலேயே ஒன்றிய அரசுக்கு (அலுவலகங்களுக்கு) ஆவணங்களை அனுப்பி, அந்த மொழிகளிலேயே பதில் பெறுகிற ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஒன்றிய அரசு தனது ஆவணங்களை அந்தந்த மாநில மொழியில் அனுப்புவதன் தேவையும் சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது. இதனால் ஒன்றியத்தில் கூடுதல் மொழிபெயர்ப்பாளர் பணியிடங்கள் உருவாகும். அத்துடன், இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இது மிக எளிதானதாக நிறைவேற்றக் கூடியதுமாகும். எது கடினமானதாக இருக்கிறது என்றால் மைய ஆட்சியாளர்களின் மனம்தான்.
“இளமையில் கல்” என்கிறது தமிழ் – அதாவது இள வயதிலேயே கற்பது நல்லது, முதுமையில் அதுவே கைகொடுக்கும். “கேட்ச் தெம் யங்” (சின்ன வயதிலேயே அவர்களைப் பிடித்துப் போடு) என்பது ஆங்கிலச் சொலவடை. இரண்டுக்கும் எவ்வளவு வேறுபாடு! ஒரு பக்கம் இங்கிலீஷ் வேண்டாம் என்று கூறிக்கொண்டு இன்னொரு பக்கம் இந்த இங்கிலீஷ் போதனையின்படி, பள்ளிகளில் சிறு வயதிலேயே பிடித்துப் போடுவது போல கட்டாய ஹிந்தி ஏற்புக்குக் குழந்தைகளைத் தயார்ப்படுத்தும் தேசிய கல்விக் கொள்கை அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு சாட்சியாக கர்நாடகம்
இப்போது கூட, தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முன்பு அண்ணா சொன்னதை மேற்கோள் காட்டி, மாணவர்கள் ஒரு புதிய மொழியைக் கற்பது அவர்களது விருப்பத் தேர்வாக இருக்க வேண்டுமேயன்றி கட்டாயப்படுத்தப்பட்டதாக இருக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் சுமார் 90,000 மாணவர்கள் ஹிந்தித் திணிப்பின் காரணமாகத் தேர்வுகளில் தோல்வியடைந்திருக்கிறார்கள் என்ற தகவலைக் குறிப்பிட்டுள்ள அவர், மாணவர்கள் தாங்களாக விரும்பித் தேர்ந்தெடுக்காத மொழியைக் கற்குமாறு கட்டாயப்படுத்துவதில் நியாயம் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார்.
“பல மொழிகளையும் கற்க ஊக்குவிப்பதுதான் எப்போதுமே தமிழ்நாட்டின் நிலைப்பாடு. நீங்கள் விரும்புகிற எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். (அரசமைப்பு சாசனத்தின்) எட்டாவது அட்டவனையில் உள்ள 22 மொழிகளையும் கற்கலாம். ஆனால் திணிக்கப்படக் கூடாது,” என்று ஒரு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கூறியிருக்கிறார். அடிப்படையான ஜனநாயக சிந்தனை உள்ளவர்கள் இதனை முழுமையாக ஏற்பார்கள்.
அமித் ஷா ஏற்கிறாரா? குடிமக்களின் இணைப்பு மொழியாகவும் தேசத்தின் அடையாள மொழியாகவும் ஹிந்தியை முன்னிறுத்தி அவர் பல முறை பேசியிருக்கிறார். மாதிரிக்கு ஒன்று:
2019ஆம் ஆண்டில் ஹிந்தி தினம் (செப். 14) கொண்டாடப்பட்டதையொட்டி அவர், "இந்தியா பல மொழிகளைக் கொண்ட ஒரு நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதன் முக்கியத்துவம் உள்ளது. ஆனால், உலக அளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுவான மொழி இருப்பது மிகவும் அவசியம். நாட்டை ஒற்றுமை நூலால் பிணைக்கக்கூடிய ஒரு மொழி இருக்கிறதென்றால், அது பரவலாகப் பேசப்படும் ஹிந்தி மட்டுமே" என்று “ட்வீட்” செய்தார்.
2022 ஏப்ரல் 7இல் நடந்த நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்தில்,“வெவ்வேறு மாநிலங்களின் குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்,” என்று கூறினார். அதைத் தெளிவுபடுத்துவது போல, “ஹிந்தியை உள்நாட்டு மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல் ஆங்கிலத்திற்கு மாற்றாகப் பயன்படுத்த வேண்டும்,” என்றார்.
2023இன் ஹிந்தி தின நிகழ்ச்சியில் அவர், “ஹிந்தி ஒருபோதும் மற்ற இந்திய மொழிகளுடன் போட்டியிட்டதில்லை, போட்டியிடாது. நாட்டின் அனைத்து மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமே ஒரு வலிமையான தேசத்தை உருவாக்க முடியும்," என்று பேசினார். அட, நியாயமான மொழிக் கொள்கையாக இருக்கிறதே என்று பலரும் கரவொலி எழுப்ப நினைத்திருப்பார்கள். ஆனால்,
“உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் பல்வேறு மொழிகளுக்கு இடையே ஹிந்தி ஒரு ஒருங்கிணைக்கும் நூலாக இருந்து வந்துள்ளது. சுதந்திரப் போராட்டம் முதல் இன்று வரை, இந்தியாவை ஒன்றிணைப்பதில் ஹிந்தி முக்கியப் பங்காற்றியுள்ளது,” தனது பேச்சுக்குப் பொழிப்புரை வழங்கினார். கரவொலி எழுப்ப நினைத்தவர்கள் உயர்த்திய கைகளை இறக்கியிருப்பார்கள்.
அமித் ஷா இப்படிப் பேசியது ஹிந்தித் திணிப்பின் இன்னொரு வடிவமே என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார். மேலும், ஹிந்தித் திணிப்பு என்பது ஹிந்துத்துவா மதவாதத்தோடும் ஹிந்து ராச்சிய அரசியல் நோக்கத்தோடும் தொடர்புள்ளது என்று சிபிஐ(எம்) தலைவர் சீத்தாராம் யெச்சூரி விமர்சித்ததும் (சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய மொழி உரிமை மாநாடு) கவனத்தில் கொள்ளத் தக்கது.
சன்னலா வாசலா?
இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகும் ஆங்கிலம் கோலோச்சிக்கொணடு இருப்பதற்கு முடிவுகட்டியாக வேண்டும் – அதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழ்நாட்டிலேயே கூட, ‘ஹிந்தித் திணிப்பு வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டாலும், தமிழின் தனிப்பெரும் ஆளுமையை நிலைநாட்டுவதற்கு மாறாக ஆங்கிலம் அமர்ந்துகொள்ள இடமளிக்கப்பட்டது என்ற விமர்சனமும் உண்டு.
ஜவஹர்லால் சொன்னது போல, ஆங்கிலம் உலகத்தின் சன்னல்தான். ஆனால், சன்னலையே வாசலாக மாற்றிய சோகமல்லவா இங்கும் வேறு சில மாநிலங்களிலும் காட்சியானது?
ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, பேத்திக் குழந்தை, “தி மூன் ஷைன்ஸ் இன் தி நைட் ஓவர் தி ஸ்கை” என்று தன் வகுப்பில் பயின்ற பாடலைப் பாடிக் காட்டினாள். பாட்டு ஆங்கிலமானாலும் பாடியது மழலையாயிற்றே, அதை ரசித்தேன். “இந்தப் பாட்டுக்கு என்ன பொருள்” என்று கேட்டேன். நான் கேட்பது புரியாமல் திகைத்தாள். “நீ பாடியதற்கு என்ன மீனிங்” என்று பொருளுக்கு மீனிங் சொன்னேன்.
“ஓ, மீனிங்கா! இந்த மூன் இருக்குல்ல, அது… ம் ம் ம் … நைட்ல … ஸ்கையில … ம் ம் ம் … ஷைன் பண்ணுது” என்று சொல்லிவிட்டுக் கலகலவென்ற சிரிப்பை அந்த நடுக்கூடத்தில் விட்டுவிட்டு ஓடினாள். நிலா இரவில் வானத்தில் ஒளிர்கிறது எனும் இனிய தமிழ் அவளின் நாவிலிருந்து களவு போனதற்கு யார் பொறுப்பு? ஆசிரியர்களை மட்டும் குறை சொல்ல முடியுமா?
இன்னொரு கேள்வியும் கை உயர்த்துகிறது. நவீன உலகத்தில் ஆங்கிலத்தை அறவே அகற்றிவிட முடியுமா? வரலாற்றுப் பினைப்புகள், அரசியல் இணைப்புகள், வணிகத் தொடர்புகள், வேலை உறவுகள், பண்பாட்டுப் பகிர்வுகள் என்று ஆங்கிலம் தனக்கான இடத்தை நிலைப்படுத்திக் கொண்டிருப்பது உண்மை. ஆகவே, ஆங்கிலத்தை அறிவுக்கான ஒரு துணைக் கருவியாகத்தான் கையாள வேண்டும், ஆங்கிலமே அறிவு என்ற மயக்கம் தெளிய வேண்டும்.
இந்தப் புரிதல் உள்துறை அமைச்சரின் மேற்படி புதிய பேச்சிலும் எதிரொலிக்குமானால் இணைந்து குரல் கொடுக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லையே.. ஆங்கிலத்தின் பிடியைத் தகர்ப்பது தேவைதான் என்றாலும், ஹிந்தியின் பிடியில் சிக்க வைக்கிற முயற்சிகளில் மாற்றமில்லை. எனவே, அமித் ஷாவின் பேச்சை சந்தேகத்துடனேயே கேட்க வேண்டியிருக்கிறது.
No comments:
Post a Comment