Saturday, 28 June 2025

ஜி-7 உச்சி மாநாட்டிலிருந்து டிரம்ப் வெளியேறியது ஏன்?

'விகடன்' டிஜிட்டல் பதிப்பில் (ஜூன் 28) வந்துள்ள எனது கட்டுரையின் வலைப்பூ பதிவு


ஏழு நாடுகள் அமைப்பின் (ஜி–7) உச்சி மாநாட்டிலிருந்து டொனால்டு டிரம்ப் வெளியேறிய செய்தி உலக அரசியல் முகத்தில்  கவலை ரேகைகளைப் படரவிடடுள்ளது.  இம்மாதம் 15, 16, 17 தேதிகளில் கனடா நாட்டின் கனானான்ஸ்கிஸ் நகரில் இந்த மாநாடு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னி, பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மாக்ரோன், ஜெர்மனி “வேந்தர்”  ஃபிரெட்ரிக் மெர்ஸ், இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா, ஐக்கியப் பேரரசு (இங்கிலாந்து) பிரதமர் கீர் ஸ்டார்மர், அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றனர். அமெரிக்காவின் அரசுத் தலைவராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின் டிரம்ப் கலந்துகொண்ட முதல் ஜி–7 உச்சி மாநாடு இது. எந்த நாட்டில் கூடுகிறதோ அந்த நாட்டின் ஆட்சித் தலைவர் தலைமையில்தான் உச்சி மாநாடு நடைபெறும். இந்த ஆண்டு கனடா பிரதமர் தலைமையில் கூடியது. 

இவர்களுடன் நாடு அல்லாத உறுப்பினரான ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆஸ்திரேலியா, பிரேசில், மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, உக்ரைன் தலைவர்களுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இவர்கள் ஏழு பேரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, மேற்கத்திய வலலரசுகளின் ராணுவக் கூட்டாகிய நேட்டோ ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இத்தனை ஆளுமைகள் கூடிய அந்த உச்சி மாநாடு, இயல்பாகவே உலக அளவில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. உலகம் இன்று சந்திக்கிற பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட  தலையாய சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்படும், தீர்வுகளுக்கான அணுகுமுறைகள் வகுக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.


சரியான கணிப்பு

அப்படியொன்றும் திட்டவட்டமான முடிவுகளுக்கு உச்சிமாநாடு போய்விடாது என்றும் உலக அரசியல் நோக்கர்கள் கணித்தார்கள். அந்தக் கணிப்பு சரிதான் என்று காட்டுவதாக உச்சிமாநாடு முடிந்தது.

முடிவதற்கு முன்பாக, இரண்டாவது நாள் கூட்டத்தையும் புறக்கணித்து ஜூன் 16 அன்று வெளியேறினார் டிரம்ப். அமெரிக்க அரசுத் தலைவராக இரண்டாவது முறை பதவியேற்ற பிறகு அவர் கலந்துகொண்ட முதல் ஜி–7 உச்சி மாநாடு அது. ஆனால், ஜி–7 உச்சிமாநாட்டிலிருந்து அவர் வெளியேறியது இது முதல் தடவையல்ல. முதல் முறை பதவியில் இருந்தபோது 2018 ஜூன் 8, 9 தேதிகளில் நடைபெற்ற உச்சிமாநாட்டிலிருந்தும் இதே போல், கூட்டம் முடிவதற்கு முன் வெளியேறினார். அப்போதும் கனடாவில்தான், அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில், உச்சிமாநாடு கூடியது.

டிரம்ப் அப்போது எஃகு, அலுமினியம் இறக்குமதிகளுக்குக் கடுமையான விகிதத்தில் வரி விதித்திருந்தார். அமெரிக்காவின் நட்பு நாடுகளிலிருந்து வந்த அந்தச் சரக்குகளுக்கும் அதே வரிதான். இதை ஒரு வர்த்தகப் போர் என்று மற்ற ஜி–7  நாடுகள் கண்டித்தன. குறிப்பாக ஜஸ்டின் ட்ரூடோ கடுமையாக விமர்சித்தார். முன்னதாக டிரம்ப் அமெரிக்காவை அதன் கூட்டாளிகள் “பன்றி வங்கி” (குழந்தைகள் காசு சேமிக்கும் உண்டியல்) போலப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கும் ட்ரூடோ தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார். 

இதனால் கோபமடைந்தவராகக் கூட்டத்திலிருந்து  வெளியேறிய டிரம்ப், மாநாட்டின் முடிவில் வெளியிடப்படும் கூட்டறிக்கையில் அமெரிக்கா சார்பாகக் கையெழுத்திட வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அது ஜி–7 ஒற்றுமைக்கு ஒரு பெரிய அடி என்று உலக அரசியல் விமர்சகர்கள் கூறினார்கள்.

புதிய காரணம்

இந்த முறை வெளியேறியதற்கு அவர் மையக் கிழக்கு பிரச்சினையைக் காரணமாக்கியுள்ளார். இஸ்ரேல், ஈரான் போரில் உடனே தலையிட்டு முடிவுக்குக் கொண்டுவர விரும்பியதாலேயே கூட்டத்திலிருந்து வெளியேறியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். வெள்ளை மாளிகை அதிகாரிகள், டிரம்ப் ஒரு செயல்திறமிக்க, பேச்சுகளை விட செயலில் ஆர்வமுள்ள தலைவர் என்றும், ஆகவேதான் உச்சிமாநாட்டில் முழுமையாகக் கலந்துகொள்ளாமல் இடையிலேயே புறப்பட்டுவிட்டார் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

உண்மையிலேயே அதுதான் நோக்கமென்றால், மாநாட்டிற்கு வராமலே இருந்திருக்கலாமே? இந்தக் காரணத்திற்காகத் தனது அலுவலகத்திலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது என்று சொல்லியிருந்தால், போரை நிறுத்துவதில் அவருக்குத்தான் எவ்வளவு அக்கறை என்று உலகம் பாராட்டியிருக்குமே?

ஒரு பக்கம் இஸ்ரேல் பிரதமரை விட அதிகத் தீவிரத்துடன் ஈரான் தலைவரைத் தாக்கிப் பேசிக்கொண்டு, இன்னொரு பக்கம் பிரச்சினையில் தலையிடுவதற்காகத்தான்கனடாவிலிருந்து திரும்பியதாக அவர் கூறுவதை யாரும் நம்பப் போவதில்லை. இது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த பிரான்ஸ் பிரதமர், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே சண்டை நிறுத்தப் பேச்சு வார்த்தைக்கு முயற்சி செய்வதற்காக டிரம்ப் வெளியேறியிருப்பார் என்று சொல்லிச் சமாளித்திருக்கிறார்.

தகவலில் உள்நோக்கம்?

ஆனால், அதை மறுத்துள்ள டிரம்ப், தான் அவசரமாக வாஷிங்டன் திரும்பியதற்கான காரணங்கள் அதை விடப் “பல மடங்கு பெரியது” என்று கூறியிருக்கிறார். அது என்ன பல மடங்கு பெரிய காரணம்? ஈரான் அணுகுண்டுகள் தயாரிப்பதற்காகவே யுரேனியம் வாங்கி வைக்கிறது. அணு அழிவிலிருந்து “உலகத்தைக் காப்பாற்றுவதற்காகவே” தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாஹூ அறிவித்திருக்கிறார். டிரம்ப்பும் கூட, ஈரான் அரசு அணுசக்தித் திட்டத்தைக் கைவிட மறுப்பது ஒரு முக்கியமான பிரச்சினை என்று கூறி வந்திருக்கிறார்.

இதனிடையே, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாகவும், 24 மணிநேரத்தில் அது செயல்படுத்தப்படும் என்றும் அவராக அறிவித்தார். ஆனால் உடனடியாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அதை மறுத்தார். அப்படிப்பட்ட உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்று அவர் கூறியிருக்கிறார். எட்டப்படாத உடன்பாடு பற்றி டிரம்ப் அறிவித்தது, இனிவரும் நாட்களில், உடன்பாட்டை மீறிவிட்டதாகக் கூறி ஈரானைத் தாக்குவதற்கான ஒரு காரணத்தை உருவாக்குவதற்காகத்தான் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இப்படிச் சொல்லித்தானே முன்பு புஷ் ஆட்சியில் இராக் தலைவர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்?

உண்மைக் காரணம் வேறு!

ஆனால், இஸ்ரேல்–ஈரான் விவகாரம் கூட டிரம்ப் வெளியேறியதற்கான உண்மைக் காரணமல்ல என்கிறார் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக அரசியல் பொருளதாரத் துறை மூத்த ஆய்வாளரான பேராசிரியர் சி.பி. சந்திரசேகர். “இந்த முறை, அமெரிக்கா அல்லாத ஆறு நாடுகளின் தலைவர்கள் மிகவும் நிதானத்தைக் கடைப்பிடிக்க முடிவு செய்திருந்தனர். ஏனென்றால் இரண்டு விசயங்களில் டிரம்ப்பின் ஆதரவு அவர்களுக்குத் தேவைப்பட்டது. ஒன்று. வர்த்தகக் கூட்டாளிகளை பலவீனப்படுத்தும் அதீதமான வரி விதிப்பு அச்சுறுத்தலைக் கைவிடுதல் தொடர்பாக நிலுவையில் உள்ள பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா இணைவது, அதனை ஈடுகட்டும் வகையில் அந்த நாடுகளிடமிருந்து குறிப்பிடத்தக்க வர்த்தகச் சலுகைகளைப் பெறுவது. இரண்டு, ரஷ்யாவுடனான போரில், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துதல் உட்பட உக்ரைனுக்கு அறம்சார் மற்றும் பொருள்சார் ஆதரவை அளிப்பது. முதல் விசயத்தைத் தொடர்வதற்கு டிரம்ப் அவசரப்படவில்லை. இரண்டாவது விசயத்தில் அவருக்கு அதே நிலைப்பாடு இல்லை,” என்கிறார் அவர் (‘ஃபிரண்ட்லைன்’, ஜூலை 15).

உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவுக்கு எதிராக ஒரு ஐரோப்பிய வற்புறுத்தலை ஏற்படுத்தவோ, ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்த போரில் ஒரு சண்டை நிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுக்கவோ தனக்கு நேரமில்லை என்று டிரம்ப் ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறார். மாறாக, ஜி–8 என்று உருவாகியிருந்த அமைப்பிலிருந்து ரஷ்யாவை வெளியேற்றியது தவறு என்றுதான் கூறியிருக்கிறார். (1975இல் பிரான்ஸ் முன்முயற்சியில் 6 நாடுகள் அமைப்பாக உருவாகியிருந்தது. அடுத்த ஆண்டில் கனடா இணைந்ததால் ஜி–7 ஆனது. 1998இல் ரஷ்யா இணைக்கப்பட்டு ஜி–8 ஆக்கப்பட்டது. 2014இல் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்து இணைத்துக்கொண்டதை எதிர்த்து, அமைப்பிலிருந்து அது இடைநீக்கம் செய்யப்பட்டது. 2017ல் ரஷ்யா தான் முற்றிலுமாக அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தது. ஜி–8 மறுபடி ஜி–7 ஆக மாறியது.)  

ரஷ்யாவை வெளியேற்றியது தவறு என்றவர் பின்னர்,. “இஸ்ரேலுக்குத் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது” என்று ஜி–7 தலைவர்களைக் கூட்டறிக்கை வெளியிட வைத்தார். ஈரான் சிக்கலைத் தீர்ப்பதில் காஸாவில் சண்டை நிறுத்தம் உள்பட, மையக் கிழக்கில் விரிவான முறையில் பகைமையைத் தணிக்க இட்டுச் செல்லும் என்று அவர்கள் கூற வேண்டும் என்று வற்புறுத்தினார்.

டிரம்ப் அகராதி

இதனைச் சுட்டிக்காட்டியுள்ள பேராசிரியர், “டிரம்ப் அகராதியில், ஈரானை அதன் அணுசக்தித் திட்டத்திலிருந்து பின்வாங்க வைப்பதும், இஸ்ரேலின் இனப்படுகொலைக்குத் வெளிப்படையான ஒப்புதல் அளித்து, காஸாவில் அதன் ஆக்கிரமிப்பைப் பயன்படுத்திக்கொள்வதும்தான், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளைக் குறைப்பதை விட, இஸ்ரேல்-ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை விட மிக முக்கியமாதாக இருக்கின்றன,” என்கிறார்.

“டிரம்ப் நிர்வாகத்தின் செய்தி தெளிவானது. ஜி–7 அமைப்பால் அதற்கு ஒரு பயனுமில்லை. தனது பொருளாதார, அரசியல் தேவைகளை முற்றிலுமாக ஏற்றுக்கொண்டு பணிந்துபோக வேண்டும் என்றே அது விரும்புகிறது. இதில் வியப்புக்குரியது என்னவென்றால், ஐரோப்பா இதற்குத் தயாராக இருப்பதும், இதர ஜி–7 நாடுகள் உடன்பட்டுப் போவதும்தான். உலக முதலாளித்துவத்தின் அம்மணத்தை மறைத்த கோவணமும் நழுவிவிட்டது,” என்று கூறிச் சிரிக்கிறார் சி,பி. சந்திரசேகர்.

அவரைப் போன்றவர்கள் சிரிப்பதில் அர்த்தம் இருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்குப் பிறகு, உலக முதலாளித்துவத்தின் பெருமையைக் கட்டிக்காப்பதற்கான செலவை தானே சுமக்க முடியாது என்று அமெரிக்க அரசு கூறி வந்தது. அதைத் தொடர்ந்து உலகளாவிய அரசியல்,பொருளாதாரச் சிக்கல்களுக்குக் கூட்டாகப் பேசித் தீர்வு காண்பது என்ற நோக்கத்தை அறிவித்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. கூட்டாகப்  பேசித் தீர்வு காண்கிறார்களோ இல்லையோ, அப்படியொரு கூட்டுத் தலைமை செயல்படுகிறது என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காவது ஜி–7 பயன்பட்டு வந்தது. இப்போது டிரம்ப்பின் தன்னிச்சையான செயல்கள் அந்தத் தோற்றத்தைக் கலைத்துவிட்டன.

கிரீன்லாந்தும் ரிவியேராவும்

உச்சிமாநாட்டிலிருந்து டிரம்ப் வெளியேறியதை விமர்சித்துள்ள பலரும் இதே போன்ற கருத்துகளையே வெளிப்படுத்தியுள்ளனர். அளப்பரிய கனிமவளங்கள் நிறைந்த, அரசியல் ஆதிக்கங்களுக்குத் தோதான ராணுவ வியூக முக்கியத்துவம் வாய்ந்த கிரீன்லாந்து தீவை வளைத்துப்போட எண்ணுகிறார் டிரம்ப். டென்மார்க் நாட்டின் பகுதியான அந்தத் தீவை வாங்கிப்போடும் அவரது விருப்பத்தை டென்மார்க் அரசும் கிரீன்லாந்து நிர்வாகமும் கடுமையாக எதிர்த்துவருகின்றன. அந்த எதிர்ப்பை பிரான்ஸ் பிரதமரும் எதிரொலிப்பதால், அது போல் வேறு பல பிரச்சினைகளிலும் அமெரிக்க அரசின் நிலைப்பாடுகளை அவர் சாடியிருப்பதால் அவர் மீது டிரம்ப்புக்குக் கடும் கோபம். பா‘லஸ்தீனத்தின் காஸா வட்டாரத்தை அமெரிக்க ராணுவம் கைப்பற்ற வேண்டும், அங்கே இத்தாலி, பிரான்ஸ் கடலோர உல்லாச விடுதிகள் உள்ள ரிவியேரா வட்டாரம் போல அமைக்க வேண்டும் என்று டிரம்ப் ஏற்கெனவே பேசியிருப்பது நினைவில் கொள்ளத்தக்கது.

உச்சி மாநாடு என்று பல நாடுகளின் தலைவர்கள் அமர்ந்து பேசி தீர்வுகளுக்கு வருவதில் டிரம்ப்புக்கு விருப்பமில்லை. நாடுகளின் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசி நிர்ப்பந்திப்பதில்தான் அவருக்கு அதிக நாட்டம். மேலும், அமெரிக்கா சொல்வதை மற்ற நாடுகள் கேட்டுக்கொள்ள வேண்டுமே தவிர, பலதரப்புப் பேச்சுவார்த்தையில் ஒரு பொது முடிவை மேற்கொள்வதில் அவருக்கு விருப்பமில்லை. அத்துடன், உச்சிமாநாடு போன்றவற்றில் அமரும்போது, அவருடைய முன்மொழிவுகளை மற்ற நாடுகளின் தலைவர்கள் பின்னுக்குத் தள்ளுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தக் காரணங்களாலும்தான ஜி–7 உச்சநிலைக் கூட்டத்தை அவர் இப்படிப் புறக்கணித்திருக்கிறார் என்ற கருத்துகள் பகிரப்பட்டிருக்கின்றன.

“கூட்டுத்தலைமை” எனக் கூடிப் பேசி எடுத்த முடிவுகளாலேயே கூட வறுமை நிலைமைகள், வேலையின்மைக் கொடுமைகள், கல்வியின்மை அவலங்கள், உடல்நலக் கேடுகள், சமூக அநீதிகள், இனவாத மோதல்கள், மதவெறிக் கலவரங்கள், ஆக்கிரமிப்புப் போர்கள் உள்ளிட்ட உலகப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காண முடியவில்லை. டிரம்ப் போன்றோரின் தன்னிச்சைத் தலைமைகளுக்குப் பணிந்து செல்லும் சூழல் நிலைப்படுமானால் என்னவாகும்? ஜி–7 முறிவு எழுப்புகிற இந்தக் கேள்விக்கு, சிறப்பு விருந்தினராகப் போய் வந்திருக்கும் இந்திய பிரதமர் போன்றோரும் விடை தேடியாக வேண்டும்.

No comments: