Friday, 21 August 2026

மாணவர் போராட்டங்களுக்கு விஜய் அரசு அஞ்சுகிறதா - சுற்றறிக்கை வாபஸ் பெற்றது பின்வாங்கலா, பதுங்கலா?


 மாணவர்களும் இளைஞர்களும் தங்களின் உரிமைகளுக்காக மட்டுமல்லாமல், பொது நியாயங்களுக்காகவும் போராட்டக் களம் காண்பது உலகம் முழுவதும் நடைபெறுவதுதான். அந்தப் போராட்டங்கள் அதிகாரத் தடிகளால் அடக்கப்படுவதை உலகம் முழுவதும் பார்த்துவருகிறோம். குறிப்பாக, இந்தியாவில் மாணவர் - இளைஞர் போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியில் ஆட்சியாளர்கள் தீவிரமாக ஈடுபடுவதை தற்போது பார்த்துவருகிறோம்.

கல்லூரி மாணவர்கள் அரசியல் இயக்கங்களில் – குறிப்பாக இடதுசாரி அமைப்புகள் மற்றும் கரப்பான் ஜனதா கட்சி முன்னெடுக்கும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளின் முதல்வர்களுக்கு ஒரு சுற்றறிக்கை (ஆக. 17) அனுப்பப்பட்டது. தமிழ்நாட்டின் கல்லூரிக் கல்வி இயக்கக ஆணையர் சார்பில் இணை இயக்குநர் அந்த சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார்.

அதில் அரசின் ஆகஸ்ட் 14 கடிதத்தை (கடித எண் 1075/ஏ1/2026–1) மேற்கோள் காட்டி, “இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே துறை இடைத் தொடர்பு, ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

"...எனவே இடதுசாரி கட்சிகள், தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ மாணவிகள், இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு, நடவடிக்கை குறித்த விவரங்களை உடனே இந்த அலுவலகத்திற்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்கிறேன்," என்றும் அது கூறுகிறது.

குஜிலியம்பாறை வட்டாட்சியர்


இதே போல் பிற மாவட்டங்களில், மற்ற வட்டாட்சியர்களும் கட்டளையிட்டு எச்சரித்திருக்கிறார்களா என்று உடனடியாகத் தெரியவில்லை. இந்தக் கெடுபிடிகளுக்கான ஊற்றுவாயாக அமைந்தது, ஜூலை 28 அன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம். அதில், இடதுசாரி இயக்கங்கள், கரப்பான் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்ற “துடிப்புக்கு” (urge) மாணவர்களும் இளைஞர்களும் “இரையாகி” (succumb) விடாமல் தடுப்பது பற்றிப் பேசப்பட்டிருக்கிறது.


ஜூலை 30 தேதியிட்ட ரகசிய, அவசரக் கடிதத்தில் அரசின் ஒரு செயலர் சார்பில், முந்தைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துக் கேட்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆகஸ்ட் 14 அன்று அரசின் சிறப்புச் செயலர் சார்பில் அனுப்பப்பட்ட கடிதம், தலைமைச் செயலர் இந்த நடவடிக்கைகளுக்கு வலியுறுத்தியிருப்பதாகத் தெரிவிக்கிறது.

அரசாங்க நடவடிக்கை என்று வருகிறபோது இத்தனை அதிகார மட்டங்கள் சம்பந்தப்படும் என்பது தெரிந்ததுதான். நமது கேள்வி, இதிலெல்லாம் கல்வித்துறை அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் சம்பந்தமே இல்லையா? என்பதுதான். மாணவ சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்தையும், ஜனநாயகப் போராட்ட உரிமையையும் பறிக்கும் இந்த அப்பட்டமான சர்வாதிகார ஆணை, அரசியல் இயக்கங்கள், கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகளிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிபிஐ(எம்), சிபிஐ, பாமக, திராவிடர் கழகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.

த.வெ.க அணி ஆட்சியில் பங்கேற்றுள்ள விசிக, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கூட விமர்சித்தார்கள். அடக்குமுறைகளால் மாணவர்களின் அரசியல் விழிப்புணர்வைக் கொஞ்சமும் முடக்கிவிட முடியாது. அதை உணர்த்தும் வகையில், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் உடனடியாகக் களமிறங்கின.


முற்றுகை அறைகூவல்

புதனன்று (ஆகஸ்ட் 19) காலையில் உயர் கல்வி இயக்குநரக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. வன்முறைத் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் பொருட்படுத்தாமல் இப்படிப்பட்ட போராட்ட அறைகூவல்களுக்கு எப்படி மாணவர்கள் எழுச்சியோடு பெருந்திரளாகக் கூடுவார்கள் என்று காட்டுகிற அண்மைக்காலச் செய்திகள் நிறையவே வந்திருக்கின்றன.


முற்றுகைக் கிளர்ச்சி அறிவிப்பின் விளைவாக, மாணவர்களின் அரசியல் ஈடுபாட்டைக் கண்காணிக்கவும், போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கவும் ஆணையிடும் சுற்றறிக்கை உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட்டது.

அத்துமீறல் ஆணையை விலக்கிக்கொண்டது நல்லது. ஆனால் விளக்கியாக வேண்டிய வினாக்கள் இருக்கின்றன. கல்விக்கூட வளாகங்களில் அதிகார வன்முறையைப் புகுத்தும் இந்த நடவடிக்கைக்கான திட்டத்தை வகுத்தது யார்? மாணவர், இளைஞர் உரிமைக் குரலை ஒடுக்குவதற்கான இந்த முன்முயற்சியின் பின்னணி என்ன? அதிலும், அரசியல் இயக்கங்கள் என்று பொதுவாகச் சொல்லாமல், இடதுசாரிக் கட்சிகள், கரப்பான் ஜனதா கட்சி என்று குறிப்பாகவே கூறப்பட்டிருப்பதன் உள்நோக்கம் என்ன?


நாடு முழுவதுமே நிலவுகிற, கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களுக்குள் மாணவர்களின் சுதந்திரமான அரசியல், சமூக அக்கறை ஈடுபாடுகளுக்குத் தடை விதிக்கும் போக்கு இங்கேயும் பிரதிபலிக்கிறதா? இதற்கு முன் சென்னை ஐஐடி வளாகத்தில் பெரியார், அம்பேத்கர் வாசிப்பு வட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டதன் விரிவாக்கமா?


நாடு முழுவதுமே நிலவுகிற, கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களுக்குள் மாணவர்களின் சுதந்திரமான அரசியல், சமூக அக்கறை ஈடுபாடுகளுக்குத் தடை விதிக்கும் போக்கு இங்கேயும் பிரதிபலிக்கிறதா? இதற்கு முன் சென்னை ஐஐடி வளாகத்தில் பெரியார், அம்பேத்கர் வாசிப்பு வட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டதன் விரிவாக்கமா?


சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “அறிவுக்கள நக்சல்கள்” (டிமாகி நக்சல்ஸ்) அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சொன்னாரே, அதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா? அறிவுக்களப் போராளிகள் மாணவர்கள், இளைஞர்களிடையேயிருந்தும் பரிணமிக்கிறார்கள் அல்லவா? ஆகவேதான் மேலே எட்டடி பாய்ந்தால் கீழே பதினாறடி பாய்கிற வேகமா?



ஒன்றிய ஆளுங்கட்சி ஆளுகிற மாநிலங்களிலேயே கூட இப்படிப்பட்ட ஆணைகள் வந்ததாகச் செய்திகள் வராத நிலையில் அவர்களுக்கும் சொல்லித்தரப்படுகிறதா? தமிழக ஆட்சியாளர்களின் அரசியல் வழிகாட்டலோடு அதிகாரிகள் இந்த முடிவை எடுத்தார்களா அல்லது ஏதோ ஊக்கத்தில் சுயம்புவாக ஆணையிட்டார்களா? ஆளுங்கட்சிக்குப் போராட்ட வரலாறு இல்லை என்பதோடு, நிகழ்காலப் போராட்ட ஒவ்வாமையும் இருப்பதை அதிகார வர்க்கம் பயன்படுத்திக்கொள்கிறதா?


முதலமைச்சருக்கோ, அமைச்சருக்கோ தெரியாமல்தான் அதிகாரிகள் முடிவெடுத்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அப்படியானால், தவெக அரசு தன்னாளுமையோடு இயங்கவில்லை, அதிகாரிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றுதானே அர்த்தம்? அதிகார வர்க்கத்தினரிடையே வலதுசாரி டிமாகிகள் ஊடுருவியிருப்பதாகக் கூறப்படுகிறதே, அதன் அறிகுறியா இது?


அல்லது, இடதுசாரிச் சிந்தனைகள் வளர்வதை முளையிலேயே கிள்ளியெறிந்துவிட வேண்டும் என்ற அரசியல் ஆசை தவெக தலைமைக்கே இருக்கிறதா? கல்வி வளாகங்கள் பாடப்புத்தக அட்டைகளுக்கிடையே மடிக்கப்பட்டுவிடக்கூடாது, வருங்காலத் தலைமுறையின் பன்முக அக்கறைகளுக்கான நுழைவாயில்களாகவும் இருந்தாக வேண்டும், அப்போதுதான் நாடும் சமுதாயமும் ஆரோக்கியமாக வளர முடியும் என்ற புரிதல் (அரசுக்கும் அதிகாரிகளுக்கும்) இல்லையா?


இவ்வினாக்களுக்கெல்லாம் உயர் கல்வித் துறைச் செயலரும், அமைச்சரும் விடையளித்தாக வேண்டும். குறிப்பாக, முதலமைச்சர் தமிழ்நாட்டிற்குத் தெளிவான விளக்கமளித்தாக வேண்டும். முக்கியமாக, தவெக ஆட்சிக்கு வழியமைத்த இளைய தலைமுறையைப் பகைத்துக்கொள்ளும் இப்படிப்பட்ட அத்துமீறல்கள் இனிமேல் தொடராது என்று திட்டவட்டமான வார்த்தைகளால் உறுதியளிக்க வேண்டும். செய்வீர்களா இளைஞர்களின் அண்ணன் அவர்களே?

இறுதி ‘வெற்றி’!


கண்காணிப்புகளும் கட்டுப்பாடுகளும் புதிய தலைமுறைகளின் அரசியல், சமூக விழிப்புணர்வையும் வீரிய எழுச்சியையும் சிறிதளவும் மட்டுப்படுத்திவிட முடியாது. உலகின் எல்லா நாடுகளிலும் இதற்கான சான்றுகள் இருக்கின்றன. தமிழகத்திலும், இந்தித் திணிப்பு எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் என வரலாற்றுத் தடங்கள் அழுத்தமாகப் பதிந்துள்ளன.


மாணவர் உரிமைகளை நோக்கி வீசப்பட்ட அதிகாரக் கட்டாரியை மழுங்கடித்த மாணவர் இயக்கங்களுக்கு நிச்சயமாக இது ஒரு வெற்றிதான். மாணவர் சமூகத்திற்கு நம்பிக்கைச் சான்றுதான். அதேவேளையில், கவனத்துடன் இருந்தாக வேண்டியிருக்கிறது. வெளிப்படையாகச் சுற்றறிக்கை விலக்கப்பட்டுவிட்டாலும், அதன் உள்ளடக்கத்தை மறைமுகமாகச் செயல்படுத்த வைக்கும் முயற்சிகள் நடக்காதென்று கூறிவிட முடியாதே. ஆயினும், கவனமாக இருப்பதற்கான ஊக்கத்தை இந்த வெற்றி அளிக்கும் என்று கூறலாம்!

[0]

விகடன் ப்ளஸ் (ஆகஸ்ட் 20) தளத்தில் எனது கட்டுரை






No comments: